12.11.13

தமிழ்ப் பட வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்: ஹிருத்திக் ரோஷன்

வாய்ப்புக் கிடைத்தால் தமிழ்ப் படத்தில் நடிக்க காத்திருக்கிறேன் என பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கூறினார்.

ஃபிலிம் கிராப்ட் இண்டர்நேஷனல் நிறுவனம் பாலிவுட்டில் தயாரித்துள்ள படம் "க்ரிஷ் 3'. 
ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோனே, கங்கனா ராவனத் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ராகேஷ் ரோஷன் எழுதி, இயக்கியுள்ளார்.
இந்தியாவின் பல மாநிலங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகியுள்ள இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனையை படைத்துள்ளது.
"க்ரிஷ் 3' படம் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வரும் ஹிருத்திக் ரோஷன், திங்கள்கிழமை சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார்.
அப்போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது:
பல திரையரங்குகளில் "க்ரிஷ் 3' வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை சந்தித்து வருகிறேன். ஆனால் சென்னை ரசிகர்களின் அன்பு, எப்போதும் என்னை நெகிழ வைக்கிறது. 
சென்னை வரும் போதெல்லாம், தமிழ் படத்தில் எப்போது நடிப்பீர்கள் என்றுதான் கேட்பார்கள். அதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து இருக்கிறேன்.
வாய்ப்பு கிடைத்தால் விரைவில் நேரடி தமிழ் படத்தில் நடிப்பேன். அந்தப் படத்தை நானே தயாரிக்கவும் ஆவலாக இருக்கிறேன்.
தமிழ் நடிகர்களை அப்படத்தில் பெருமளவில் பயன்படுத்துவேன். அடுத்து நடிக்கவுள்ள படத்தில், தமிழ் கலைஞர்களின் பங்கு பெருமளவில் இருக்கும்.
ரசிகர்கள் எந்த மாதிரியான படங்களை எதிர்பார்க்கிறார்களோ, அந்த மாதிரியான படங்களில் மட்டுமே நடிப்பேன்.சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து "கிரிஷ் 3' படம் உருவாகியுள்ளது.
சூப்பர் ஹீரோ என்பதால் சூப்பர் ஹீரோயின் யார் என கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அம்மா, மனைவி, சகோதரி ஆகியோரே சூப்பர் ஹீரோயின்கள் என்றார் ஹிருத்திக் ரோஷன்.
கிரிஷ் 3 படத்தின் இயக்குநர் ராகேஷ் ரோஷன், ஒளிப்பதிவாளர் திரு, படத்தின் தமிழக விநியோக உரிமையை பெற்றுள்ள சிபு உள்ளிட்டோர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது உடனிருந்தனர்.  

No comments:

Post a Comment