27.12.13

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?


மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.

சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.இதைமட்டும் நீங்கள் செய்யவே கூடாது.

உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும்.

உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும். இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ).

அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம். Hairdryer போன்றவற்றை முயற்சி செய்யலாம்.

போன் நன்றாக காய்ந்த பின் அதில் நீர் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பின் அதை ஆன் செய்ய முயற்சிக்கவும்.பெரும்பாலும் ஆன் ஆகிவிடும், இல்லை என்றால் வேறு பேட்டரி இருந்தால் அதை போட்டு முயற்சி செய்யவும். அப்போதும் ஆன் ஆனால் போன் ஓகே, பேட்டரி பிரச்சினை. அப்போதும் இல்லை என்றால் கடைக்காரரிடம் கொண்டு போய் கொடுக்கவும்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி


ந‌ம்‌மி‌ல் பலரு‌க்கு‌ம் தெ‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம் அடையாறு பு‌ற்றுநோ‌ய் மரு‌த்துவமனையை‌ப் ப‌ற்‌‌றி. ஆனா‌ல் அ‌ந்த ஆலமர‌த்‌தி‌ன் ஆ‌னி வே‌ர் யா‌ர் எ‌ன்று ‌சிலரு‌க்கு தெ‌ரி‌ந்‌திரு‌க்காது.
இந்தியத் திருநாட்டில் முதல் சட்டசபை பெண் உறுப்பினர், முத‌ல் பெ‌ண் மரு‌த்துவ‌ர் என்கிற பல சாதனைகளுட‌ன் வரலா‌ற்று‌ப் ப‌‌க்க‌ளி‌ல் இட‌ம்‌பிடி‌த்த இவ‌ரி‌ன் வா‌ழ்‌விய‌ல், ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு. அத‌ற்காகவே இ‌ங்கு நா‌ன் அதனை வெ‌ளி‌யிடு‌கிறே‌ன்.
ஒரு நா‌ள் தமிழக சட்டசபையில் அன‌ல் பற‌க்கு‌ம் ‌விவாத‌ம் நட‌‌ந்தது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக, கோயில்களில் பொட்டுக்கட்டுதல் என்கிற ‘தேவதாசி’முறை வழக்கத்திலிருந்தது. அது ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அனல் பறக்கும் விவாதத்திற்குக் காரணமாக இருந்தது.
பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து.. தனது நெஞ்சுரத்தால் பெண் விடுதலைக்காகவும் தேவதாசி ஒழிப்புக்காகவும் தன்னை போராடிய அந்த வீரப்பெண், ” ‘தேவதாசி’முறை தமிழகத்திலிருந்து ஒழிக்கப்பட்டே தீரவேண்டும்.. வரும் காலத்தில் ‘தேவதாசி’ என்கிற பெயர் சரித்திரத்தில்கூட இடம்பெறக் கூடாது” என்று ஆவேசமாக முழக்கமிட்டார்.
அந்தப்பெண்ணின் வீரமுழக்கத்தை மறுக்கும் விதமாக.. சத்தியமூர்த்தி அவர்கள், “தேவதாசிகள் என்பவர்கள் ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள், அவர்கள் தேவர்களின் அதாவது தெய்வங்களின் அடிமை என்கிற புனிதத்தன்மை பெற்றவர்கள். அதை ஏன் ஒழிக்க வேண்டுமென்கிறீர்கள்?” என்று கேட்டார்.
சற்றும் தாமதிக்காமல்.. அந்தப் பெண், “தேவதாசி முறை புனிதமானது என்றால், தேவதாசி முறை ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றால், அந்தத் தொழிலை பிற்படுத்தப்பட்ட எங்கள் குலத்துப் பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா? உங்கள் உயர்ஜாதிக் குடும்பத்திலிருந்து எந்தப் பெண்ணையாவது தேவதாசி ஆக்குங்களேன்!” என்று அனல்தெறித்தார். சட்டசபையே ஒரு நொடி ஆடிப்போனது.
அந்தக் கனல் பொழிந்த குரலுக்குச் சொந்தக்காரர்தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி!
இந்தியத் திருநாட்டில் முதல் சட்டசபை பெண் உறுப்பினர் என்கிற வரலாற்றுப் பெருமைக்குச் சொந்தக்காரரான இவரின் வாழ்வியல், ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு. 1886 ஆம் வருடம் புதுக்கோட்டையில் நாராயணசாமிக்கும், சந்திரம்மாளுக்கும் மூத்தமகளாகப் பிறந்தார் முத்துலட்சுமி. முத்துலட்சுமியின் குடும்பம் அன்று புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பெரும் மதிப்புக்குரிய குடும்பமாகத் திகழ்ந்தது. அவரது தந்தை நாராயணசாமி, மகாராஜா கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியபோதும் கரைபடியாத கரம் என்பதால்… வீட்டுக்குள் நான்கு பிள்ளைகளையும் படிக்க வைக்க முடியாத பணப்பற்றாக்குறை ஏற்பட்டது.
மூத்த பெண்ணான முத்துலட்சுமியை பள்ளிப் படிப்போடு நிறுத்தி விடலாமா? என்று நாராயணசாமி நினைத்தபோது… முத்துலட்சுமியின் கல்வியறிவை முடக்கி அவரை கிணற்றுத் தவளையாக்கிவிட வேண்டாம் என, அவர் படித்த பள்ளி ஆசிரியர்கள் நாராயண சாமியிடம் கெஞ்சினார்கள்.
முத்துலட்சுமி, அவர்களின் கெஞ்சுதலுக்கு நன்றி உபகாரமாக, பள்ளிக்கூடத்திலேயே அவர் ஒருவர் மட்டும் மெட்ரிக்குலேஷன் தேர்வில் வெற்றி பெற்று பள்ளியின், ஆசிரியர்களின் மானத்தைக் காப்பாற்றினார்.
அதற்கடுத்து புதுக்கோட்டை அரசர் கல்லூரியில் சேர்ந்தபோது, அவருக்கு கல்லூரி நிர்வாகம் ரத்தினக் கம்பள வரவேற்புத் தந்தது. அங்கே அவரது ஆங்கிலப் புலமை… ஆசிரியர்களை அசரவைத்தது.
அத்தனை திறமையும், புத்திக்கூர்மையும் கொண்ட முத்துலட்சுமிக்கு கண்பார்வைக் கோளாறு என்கிற குறையிருந்தது. இருப்பினும், படிப்பையே தனது பார்வையாக மாற்றிக்கொண்டார். அடுத்து, அவருக்குள்ளிருந்த உடல்நலக் குறைபாடு அவரை மருத்துவத் துறையில் கால் பதிக்கத் தூண்டியது.
மருத்துவக் கல்லூரி மாணவியாக அவர் கால் பதித்தபோது, அந்தக் கல்லூரி அவரை இருகரம்நீட்டி வரவேற்றது.
மருத்துவக் கல்லூரியில் சிறந்த மாணவியாக முத்துலட்சுமி திகழ்ந்தார். 1912_ல் மருத்துவராய் வெளியே வந்தார்.
அடுத்து, சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றியபோதுதான் அவருக்கு அரசியல் மீது ஆர்வம் பிறந்தது.
பெண்ணடிமைத்தனம் விலக வேண்டும், தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடுமைகள், அநீதிகள் அழிக்கப்பட வேண்டும். அதற்கு நாம் அரசியலில் இறங்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்குள் உதயமானது.
முத்துலட்சுமியின் அயராத உழைப்பு…. அவரை மருத்துவத்துறையில் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.
அறுவை சிகிச்சைத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று ‘முதல் இந்திய மருத்துவப் பெண்மணி’ என்கிற வரலாற்றுச் சான்றிதழோடு வெளியே வந்தார்.
அடுத்து அவருடைய இலக்கு.. ஏழை எளிய மக்களுக்காக அதுவும் தனது பகுதி மக்களுக்கான சேவையில் தொடங்கியது. புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்கள் எல்லாம் அவர் கரம்பட்டு நலமானது….. அவர் சிகிச்சையால் புத்துயிர் பெற்றன.
அவரது வளர்ச்சியில்… சேவை மனப்பான்மையில்… புளங்காகிதம் அடைந்த அவரது பெற்றோர், அவருக்குத் திருமணம் செய்விக்க விரும்பினர். ஆனால், திருமணம், பெண்களை அடிமையாக்கும்_ஆணாதிக்கம் செலுத்தும் ஒரு சடங்கு என்று நினைத்ததால் அவர் மறுத்தார்.
இருப்பினும், அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் சுப்பராயுலு ரெட்டியாரின் மகன் டாக்டர் சுந்தர்ரெட்டியார்… முத்துலட்சுமியின் தந்தையை அணுகி… “முத்துலட்சுமியின் மனம் அறிந்தவன் நான். அவரைத் திருமணம் செய்ய விரும்புகிறேன்..” என்று பெண் கேட்டார்.
அவர் தனது விடுதலை உணர்வுக்கு எந்த விதத்திலும் தடையாகவோ இடைஞ்சலாகவோ இருக்கமாட்டார் என்று உணர்ந்த பின்பு முத்துலட்சுமி திருமணத்திற்குச் சம்மதித்தார். டாக்டர் முத்துலட்சுமியை திருமணம் செய்துகொள்ள டாக்டர் சுந்தர்ரெட்டி விருப்பம் தெரிவித்தபோது, மூன்று நிபந்தனைகளை அம்மையார் விதித்தார்.
1. தம்மை சரிசமமாக நடத்த வேண்டும்.
2. தன் சொந்த விருப்பங்களுக்குக் குறுக்கே நிற்கக் கூடாது.
3. தம்மை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
சுந்தர்ரெட்டி இவற்றுக்கு இணங்கிய பிறகே 1914 ஏப்ரலில் ‘தியாசபிகல் சொசைட்டி (பிரம்ம சமாஜ) சட்டத்தின்படி திருமணம் நடந்தது. முத்துலட்சுமி திருமதி ஆனார். ராம்மோகன், கிருஷ்ணமூர்த்தி என்கிற இரண்டு மகன்களைப் பெற்றார்.
அவரது கணவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணி மாற்றலாக, முத்துலட்சுமி புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தார். அந்த நேரத்தில் அவரது தங்கைக்கு புற்றுநோய் தாக்க… தான் ஒரு மருத்துவராக இருந்தும் அவரைக் காப்பாற்ற முடியாமல் பதறினார்.
புற்றுநோய் எனும் உயிர்க்கொல்லி நோயிலிருந்து இனி யாரையும் சாகவிடக் கூடாது என்கிற எண்ணம் அவருக்குள் உறுதியானது. 1925_ல் கணவர், குழந்தைகளுடன் லண்டனுக்குச் சென்று அங்கே செல்சியா மருத்துவமனையில் தாய், சேய் மருத்துவ ஆராய்ச்சியும், இராயல் புற்றுநோய் மருத்துவமனையில் புற்று நோய் பற்றிய ஆராய்ச்சியும் செய்ய ஆரம்பித்தார்.
அதோடு அங்கே நாற்பத்திரண்டு நாடுகள் கலந்துகொண்ட மகளிர் மாநாட்டில் இவரும் இந்திய மாதர் சங்கப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அப்போது… உலகம் முழுக்கப் பெண்களுக்குச் சுதந்திரம் மறுக்கப்படுவதும், ஆண்கள் ஆதிக்கத்தால் பெண்கள் அடிமைகளாய் கட்டுண்டு கிடப்பதும், பெண்கள் வெறும் போகப்பொருள் என்கிற நிலையிலிருப்பதும் அவருக்குள் ஒரு புரட்சித் தீயை உருவாக்கியது.
இங்கிலாந்திலிருந்து புற்றுநோய்க்கான ஆராய்ச்சியை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும் இந்திய மாதர் சங்கம் அவரை அரசியல் களத்திற்குள் இறக்கிவிட்டது. முத்துலட்சுமியின் வீரமும், விவேகமும் அவரை இந்தியத் திருநாட்டின் முதல் சட்டசபை உறுப்பினராக்கியது.
அந்த உறுப்பினர் எனும் கவசத்தால்… ‘தேவதாசி…’ ‘பெண் அடிமை’ ‘பால்ய வயதுத் திருமணம்’ எனும் பேய்களை ஓட்டினார்.
எல்லாவற்றிற்கும் மேலே… புற்றுநோய் நிவாரண மருத்துவமனையை அவர் சார்ந்திருந்த மாதர் சங்கம் சென்னையில் தொடங்கியது. அன்று சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட அந்தப் புற்றுநோய் மருத்துவமனை, இன்று பல்லாயிரக்கணக்கான புற்றுநோய் நோயாளிகளின் உயிர் காக்கும் தோழியாகச் செயல்பட்டு வருகிறது.
1954_ல் பன்னிரெண்டு படுக்கைகளோடு தொடங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இன்று புற்றுநோய் ஆய்வு மையம், புற்றுநோய் தடுப்பு, டாக்டர் முத்துலட்சுமி புற்றுநோய் அறிவியல் துறை கல்லூரி… என விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இன்று அந்த மருத்துவமனையில் பயன்பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு எண்பதாயிரம் பேர்.
பெண் விடுதலைக்காகவும்.. ஏழை, எளிய மக்களுக்காகவும் தனது வாழ்வின் பெரும்பகுதியைச் செலவழித்த முத்துலட்சுமி ரெட்டிக்கு 1937_ம் வருடம் சென்னை மாநகரத் தலைமையாரால் ‘ஆல்டர் வுமன்’ என்கிற பட்டம் வழங்கப்பட்டது. இது மட்டுமன்றி 1956_ல் இந்திய அரசின் பத்மபூஷண் விருதுக்கும் அவர் சொந்தக்காரர் ஆனார்.
1936_ல் சென்னை அடையாறில் குடியேறிய பிறகு.. முழு நேர மருத்துவ உதவிகளோடு.. மீனவக் குழந்தைகளின் கல்விக்காகவும் பாடுபட்டார். நூலகங்களை உருவாக்கினார். டாக்டர் சௌந்திரம் இராமச்சந்திரன் துணையோடு காந்திகிராமப் பணிகளைத் தொடங்கினார்.
தனது இறுதி மூச்சு உள்ளவரை பொதுநலமும்.. பெண்களின் சுதந்திர வாழ்க்கையுமே அவரின் ஒரே மூச்சாக இருந்தது. 1968_ம் வருடம் தனது 82_வது வயதில் அந்த இதயம் நின்றபோது, அவருக்காக பல ஆயிரம் இதய‌ங்க‌ள் துடி‌த்த‌ன். க‌ண்க‌ள் க‌ண்‌ணீ‌ர் ‌‌வி‌ட்டன.
டாக்டர் முத்துலட்சுமி மறைந்தாலும் அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் அவர் ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கிறது.  ஒரு பெ‌ரிய க‌ட்டுரை எ‌ன்றாலு‌ம், இதை‌ப் படி‌த்தது‌ம் நம‌க்கு எ‌த்தனை ‌விஷய‌ங்க‌ள் ‌விள‌ங்கு‌கிறது. எ‌ந்த வா‌ய்‌ப்பு‌ம் இ‌ல்லாம‌ல், தனது சொ‌ந்த முய‌ற்‌சி‌யா‌ல் முன்னேறிய மு‌த்துல‌ட்சு‌மி நமக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்குகிறார்.


பேச்சைக் குறைத்து ஆயுளைக் கூட்டுவோம்


பேசுவதைக் குறைத்துக் கொண்டால் எவ்வாறு கதிர்வீச்சில் இருந்து தப்பிக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம். ஆம். செல்போனில் பேசுவதைக் குறைத்துக் கொண்டால் கதிர்வீச்சில் இருந்து நிச்சயம் தப்பித்துக் கொள்ளலாம்.
அதாவது, செல்போன் பேசும் போது அதில் இருந்து வரும் கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்குகின்றன. இதனால் மூளை மற்றும் தலைப் பகுதிகளில் ஏராளமான பிரச்னைகளும், புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதுபோன்ற அபாயத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் செல்பேசியில் மணிக்கணக்கில் பேசுவதைத் தவிர்க்கலாம்.
ஆனால், நீங்கள் செல்போன் பயன்படுத்தினாலும், பயன்படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் கையில் வைத்திருக்கும் செல்பேசியில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சும் நம்மை பாதிக்கவே செய்யும்.
நம்மூர்களில் அதிகரித்து வரும் செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் தான் சின்னஞ்சிறு குருவி வகைகள் காணாமல் போய்விட்டன என்பதை மனிதன் மிக தாமதமாகவே அறிந்து கொண்டுள்ளான். ஆனாலும், அதற்காக எந்த முயற்சியையும் அவன் எடுக்கப்போவதில்லை.
எப்படியாகினும், செல்போன் கதிர்வீச்சில் இருந்து நம்மை பாதுகாக்கும் வழி முறைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
செல்பேசியில் பேசுவதை முடிந்த அளவுக்கு தவிருங்கள். அலுவலகம் மற்றும் வீடுகளில் லேண்ட்லைனைப் பயன்படுத்தலாம். மேலும், ஹெட் போன் போன்றவற்றையும் பயன்படுத்துவதால் பாதிப்பு குறையும்.
நண்பர்களுடன் வீண் அரட்டை அடிக்க வேண்டும் என்றால், அதற்கு குறுஞ்செய்தி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளிடம் செல்போனைக் கொடுக்க வேண்டாம்.
செல்பேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் பேச வேண்டாம். அவ்விடங்களில் கதிர் வீச்சு பாதிப்பு அதிகம் ஏற்படும்.
தூங்கும் பொழுது போனை அருகிலேயோ, தலைக்கு அருகிலோ வைத்து கொண்டு தூங்கும் பழக்கத்தை உடனடியாக விட்டுவிடுங்கள். செல்பேசி என்றில்லை, எந்த எலக்ட்ரானிக் பொருளையும் தலைக்கு அருகில் வைக்காதீர்கள்.
ஒருவரை நாம் செல்பேசியில் அழைக்கும் போது அவர் பேச எடுத்தவுடன் காதில் வையுங்கள். ரிங் போகும் போது கையில் வைத்து அதனை பார்த்துக் கொண்டிருப்பது நல்லது. ரிங் போகும் போதுதான் அதிக கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படுகிறது.
கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
செல்பேசியில் பேசும் பொழுது கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். அதிகம் மூடியபடி பேசினால், கதிர்வீச்சு அதிகமாகத் தேவைப்படும் நிலை ஏற்படலாம்.

நடிகர் சின்னி ஜெயந்துக்கு டாக்டர் பட்டம்



நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்துக்கு, ’த ஓப்பன் இண்டர்நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ஆல்டர்நேட் மெடிசின்’ கெளரவ டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறது.
மிமிக்ரி கலைஞரான சின்னி ஜெயந்த், 1984ஆம் ஆண்டு ‘கை கொடுக்கும் கை’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
கடந்த 29 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில், ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளனர். மேலும், பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அவருடைய கலைச்சேவையைப் பாராட்டி, கெளரவ டாக்டர் பட்டத்தை மாற்று மருந்தியல் பல்கலைக்கழகம் வழங்க இருக்கிறது. வருகிற 29ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் கெளரவ டாக்டர் பட்டம் சின்னி ஜெயந்துக்கு வழங்கப்படும்.

விக்ரம் பிரபுவை இயக்கும் ‘ஹரிதாஸ்’ இயக்குநர்!





கிஷோர், சிநேகா, சூரி நடிப்பில் இந்த வருடம் வெளியாகி, அனைவரின் பாராட்டையும் பெற்ற படம் ‘ஹரிதாஸ்’. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 11-வது சர்வதேச திரைப்பட விழாவில்,  சிறந்த படத்துக்கான இரண்டாவது விருதைப் பெற்றது இந்தப் படம்.

இந்தப் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன், தற்போது விக்ரம் பிரபுவை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். ‘மிஸ்ரி எண்டர்பிரைசஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ‘தலைவா’ படத்தைத் தயாரித்த ‘ஸ்ரீ மிஸ்ரி புரொடக்‌ஷன்ஸ்’ சந்திரபிரகாஷ் ஜெயினின் தம்பியின் நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகி உள்ளிட்ட கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

நட்சத்திர கிரிக்கெட்: சென்னை அணியின் விளம்பர துணை தூதராக சஞ்சிதா ஷெட்டி


சினிமா நட்சத்திரங்கள் விளையாடும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் சென்னை அணி விளம்பர துணை தூதராக சஞ்சிதா ஷெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக சி.சி.எல்.எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டிகள் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். விரைவில் 4வது ஆண்டு சி.சி.எல்.போட்டிகள் நடக்கவிருக்கிறது.
சென்னை, புனே, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இப்போட்டிகள் நடைபெறவிருக்கிறது. ஏற்கெனவே சென்னை அணிக்கு நடிகை த்ரிஷா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது நடிகை சஞ்சிதா ஷெட்டியும், சென்னை அணியின் துணை விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு அணிக்கும் அந்தந்த மாநிலத்து சினிமா பிரபலங்கள் விளம்பர தூதர்களாக நியமிக்கப்படுவது வழக்கம்! அந்த வகையில் இந்த வருடம் தமிழக அணிக்கு த்ரிஷா மற்றும் சஞ்சிதா ஷெட்டி விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஏப்ரலில் வெளியாகுமா விஸ்வரூபம் 2?


கமல்ஹாஸனின் விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப் போய்விட்டது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து இயக்கும் படம் விஸ்வரூபம் 2. இந்த ஆண்டு தொடக்கத்தில் பல பிரச்சனைகளையும் தடைகளையும் கடந்து வெளியான விஸ்வரூபம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிக்கொண்டிருக்கிறது.
விஸ்வரூபம் முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் மட்டுமன்றி, இரண்டாம் பாகத்தில் வேறு சில நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர். பூஜா குமார் மற்றும் ஆன்ட்ரியா நாயகிகளாக நடித்துள்ளனர்.‘விஸ்வரூபம் 2′ படத்தினை கமல் தயாரிக்கவில்லை, ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. ‘விஸ்வரூபம்’ படம் வெளியாகும் போதே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்தவர் ரவிச்சந்திரன். இரண்டாம் பாகத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
அதுமட்டுமன்றி கமலும், முதல் பாகம் போன்று எந்த ஒரு சர்ச்சையிலும் இரண்டாம் பாகம் சிக்கி விடக்கூடாது என்பதால் அதற்கேற்ப திட்டமிட்டு வெளியிடுகிறார்களாம். இஸ்லாமிய அமைப்புகளிடம் ஏற்கெனவே இது பற்றிப் பேசியிருக்கிறார்கள். ‘விஸ்வரூபம்’ ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் சில தியேட்டர்களில் மட்டும்தான் வெளியிடப்பட்டது, ‘விஸ்வரூபம்2′ அனைத்து தியேட்டர்களிலும் ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட, கமல் முயற்சித்து வருகிறார்.
படம் இந்த ஆண்டே வெளிவரும் என்றுதான் அறிவித்திருந்தார் கமல். முதலில் இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்தது. பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 26-ம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 14-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது விஷ்வரூபம்-2 படம் வருகிற 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என்று கோலிவுட்டில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. படத்தின் டிரைலரை பிப்ரவரியிலும், படத்தை ஏப்ரலிலும்ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் கமல்.

விஷாலுக்கு ஜோடியாகிறார் ஸ்ருதி ஹாசன்!


விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கப் போகிறாராம்.

யுடிவி மோசன் பிக்சர்ஸ் மற்றும் விஷால் பிலிம்பேக்டரி இணைந்து தயாரிக்கும் படம் நான் சிகப்பு மனிதன். திரு இயக்கும் இந்தப் படத்தில் விஷால் ஹீரோ.
அவர் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இன்னொரு முக்கிய கேரக்டரில் இனியாவும் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால்.
இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க இருக்கிறாராம். அப்படி நடந்துவிட்டதால் இருவரும் முதன்முறையாக இணையும் படமாக அது இருக்கப் போகிறது. அதோடு கிசுகிசுவுக்கும் பஞ்சமிருக்காது.

இன்று வீடு திரும்புகிறார் இளையராஜா?


இசையானி இளையராஜா இன்று மருத்துவமனையில் இருந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 23ம் தேதி இசைஞானி இளையராஜா நெஞ்சுவலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய÷இதயத் துடிப்பை கண்காணித்த மருத்துவர்கள் இளையராஜாவுக்கு லேசான மாராடைப்பு இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அவருக்கு "ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துவந்த இளையராஜா நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இளையராஜா தற்பொழுது பூரண குணமாகியுள்ளதால் இன்று வீட்டிற்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளையராஜாவிற்கு ஏற்பட்ட இந்த நெஞ்சுவலியால் அவரது ரசிகர்கள் மாபெரும் துயரத்திற்கு உள்ளாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

2013ல் அதிக பாடல்கள் எழுதிய பாடலாசிரியர்


2013ல் அதிக படங்களில், அதிக பாடல்கள் எழுதியவர் என்கிற பெருமையை தட்டிச்செல்கிறார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.

அதிலும் 34 படங்களில் 106 பாடல்கள் என்பது மிகப்பெரிய சாதனைதான். இதில் 10 படங்களில் அனைத்துப்பாடல்களையும் எழுதியிருப்பது இன்னொரு சாதனை. ‘தங்கமீன்கள்’ படத்தில் “ஆனந்தயாழை மீட்டுகிறாய்”, ‘தலைவா’வில் “வாங்கன்ன வணக்கங்கன்ன” “யார் இந்த சாலையோரம்”, ‘ராஜாராணி’யில் “சில்லென ஒரு மழைத்துளி”, ‘உதயம் என்.ஹெச்-4’ல் “யாரோ இவன்”, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வில் “ஒன்னப்பாத்த நேரம்” என இந்த வருடத்திய சூப்பர்ஹிட்டுகள் எல்லாமே நா.முத்துக்குமாரின் கைவண்ணம்தான்.
இவைதவிர, தற்போது 97 படங்களுக்கு இவர் பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார். அதில் 31 படங்களுக்கு அனைத்து பாடல்களையும் இவர்தான் எழுதுகிறார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடரும் இவரது இசையுலகப்பயணம் பத்தாவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறது.

‘நான் ஈ’ சுதீப்பை இயக்கும் பேரரசு?



நான் ஈ’ சுதீப்பை வைத்து பேரரசு புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

சமீபகாலமாக பேரரசு இயக்கிய படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. அதனால் எப்படியாவது ஒரு சூப்பர்ஹிட் படம் கொடுத்தே தீருவேன் என்ற வைரக்கியத்துடன் தற்போது ‘திகார்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் பேரரசு.
இந்தப் படத்தில் மிகப்பெரிய டானாக அலெக்ஸ்சாண்டர் என்ற வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மலையாள இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். இது மலையாளத்தில் மம்முட்டி நடித்து 22 வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘சாம்ராஜ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து பேரரசு, நான் ஈ’ சுதீப்பை வைத்து தமிழ் மற்றும் கன்னடத்தில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதுபற்றி சுதீப் சொல்லும்போது “பேரரசும் நானும் இதுபற்றி பேசியுள்ளோம். ஆனால் எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்கிறார்.
ஆனால் பேரரசுவோ “இருமொழிகளில் சுதீப்பை வைத்து படம் இயக்குவது கிட்டத்தட்ட உறுதிதான். இந்தப்படம் வழக்கமான என் பாணியிலான கமர்ஷியல் படமாக இருக்கும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்க முடிவு செய்திருக்கிறேன்” என்கிறார். திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, பழனி, திருவண்ணாமலை, திருத்தனி போன்ற படங்களை இயக்கியிருப்பவர்தான் இந்த பேரரசு.

தியேட்டரில் சிம்பு-நயன்தாரா


சிம்பு இப்போது ஒரே நேரத்தில் இரண்டு புதிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒன்று, பாண்டிராஜ் இயக்கும் படம், மற்றொன்று கௌதம் மேனன் இயக்கும் படம். இதில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதுவரை நயன்தாரா இல்லாமல் நடந்து கொண்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் தற்போது நயன்தாராவும் கலந்துகொண்டதால் படப்பிடிப்பு வேகமெடுத்துள்ளது. சமீபத்தில் சிம்பு-நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சியை சென்னை சத்யம் தியேட்டரில் வைத்து படமாக்கியுள்ளனர்.
சிம்பு சத்யம் தியேட்டரில் வாசலில் ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்து சூரியுடன் வாசலில் நிற்பது போலவும், அப்போது நயன்தாரா வந்ததும், இருவரும் தியேட்டரின் கேண்டீனுக்கு செல்வது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. படம் பார்க்க வந்த ரசிகர்கள் சிம்புவையும், நயன் தாராவையும் பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிவிட்டனராம்.

தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவு?


தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சின்னத்திரை காம்பையராக இருந்து சினிமாவில் ஹீரோவாகியிருப்பவர் சிவகார்த்திகேயன். அந்த வகையில் டிவியில் இருப்பவர்கள் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்ற செண்டிமென்ட்டை உடைத்தெறிந்துவிட்டு தற்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடர்ந்து இந்த வருடம் மட்டும் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயனை வளர்த்துவிட்டதில் தனுஷுற்கு முக்கிய பங்கு உண்டு என்று சொல்லலாம். தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படம்தான் சிவகார்த்திகேயனுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதுமுதல் சிவகார்த்திகேயனின் மார்கெட் உயரச் சென்றதோடு மட்டுமல்லாமல் கோடிகளை சம்பளமாகவும் பெறத் துவங்கிவிட்டார்.
ஒருபுறம் சிவகார்த்திகேயன் வேகமாக வளர்ந்து வந்தாலும் அவரை வளர்த்துவிட்ட தனுஷின் நிலையோ இறங்குமுகமாகத்தான் உள்ளது. இந்த ஆண்டில் தனுஷ் நடித்து வெளிவந்த ‘மரியான், நய்யாண்டி’ இரண்டு படங்களுமே மாபெரும் தோல்விப் படங்களாக அமைந்தன. இதனால் தனுஷின் நெருங்கிய வட்டாரங்களுக்கு அவர் சிவகார்த்திகேயனை வளர்த்து விடுவது பிடிக்கவில்லையாம். சிவகார்த்திகேயன் நடித்துள்ள படங்கள் எல்லாமே நீங்கள் நடிக்க வேண்டிய படங்களைப் போலவே உள்ளன. உங்களுக்குப் போட்டியாக நீங்களே ஒருவரை உருவாக்கி, தோல்வியை சந்தித்துக் கொள்கிறீர்களே என்கிறார்களாம். இது, தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவை உண்டாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ், சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் ஒரு படம் தயாரிக்க இருந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் லேசாகப் புகைய ஆரம்பித்துள்ள இந்த விவகாரம் தீப்பிடித்து எறியும் என்கிறார்கள்.

மதுரையில் 40 குவாரிகளுக்கு சவுடு மண் உரிமம் திடீர் ரத்து

மதுரை மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட சவுடு மண் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் கனிமவளத் துறையால் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
 பட்டா நிலம் மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களில் இருந்து சவுடு மண் எடுக்க 40-க்கும் மேற்பட்டோருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு காரணங்களைக்கூறி இந்த உரிமம் கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உரிமதாரர்களுக்கு கனிமவளத் துறையிடம் இருந்து அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக உரிமதாரர்கள் தரப்பில், கனிமவளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வியாழக்கிழமை முறையிட்டுள்ளனர். இருப்பினும் உரிமம் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது தொடர்வதாக உரிமதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி: ஒருவர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 31 பேரிடம் பல லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் திருச்சியில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி, பர்மா காலனியைச் சேர்ந்த முத்துவேல் மகன் ராஜேஷ்கண்ணன் (39). இவர் தற்போது திருச்சி, விமான நிலையம், மருவூகரசி தெருவில் வசித்து வருகிறார்.
இவர் மலேசியவில் தான் வைத்திருக்கும் ஹோட்டல் மற்றும் புருனே, சிங்கப்பூரில் தனது நண்பர் வைத்திருக்கும் ஹோட்டலுக்கு பணிபுரியவதற்காக ஆட்கள் தேர்வை நடத்தியுள்ளார்.
இந்த தேர்வில் காரைக்குடி, தேவக்கோட்டைச் சேர்ந்த 23 பேர், திருவாரூர், மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்கோட்டை, வெள்ளவிடுதியைச் சேர்ந்த 8 பேரிடம்  இரண்டு மாதத்தில் வேலைக்கு அனுப்பி விடுவதாக கூறி அவர்களிடம் தலா ரூ.2 லட்சம் ரொக்கத்தை பெற்றுள்ளார்.
மூன்று மாதத்திற்கும் மேலாகியும் அவர்களை வேலைக்கு அனுப்பவில்லை. வேலைக்காக காத்திருந்த பணம் கொடுத்தவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் வேலை என்னாச்சு என்று ராஜேஷ்கண்ணனிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் இசிஎன்ஆர் வாங்கவேண்டும், மருத்துவர் பரிசோதனை செய்யவேண்டும் என்று கூறி மேலும் அவர்களிடம் ரூ. 3,000 ரொக்கத்தை பெற்று சென்றார்.
பின்பு அவர்களிடம் விசா,டிக்கெட், தயாராக இருக்கிறது டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி அனைவரும் வெளிநாட்டிற்கு செல்லவேண்டும் என்று ராஜேஷ்கண்ணன் கூறியுள்ளார். இதனை கேட்ட பணம் கொடுத்தவர்கள் டிச.4 ஆம் தேதி திருச்சி விமான நிலையம் வந்தனர்.
அப்போது அங்கு வந்த ராஜேஷ்கண்ணனின் மனைவி முத்துலட்சுமி வந்தவர்களிடம் இன்னும் டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை என்றும், உங்களது உடைமைகளை மருவூர் தெருவில் உள்ள எங்களது வீட்டில் வைத்துச் செல்லுங்கள் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்படி அனைவரும் உடைமைகளை அவர்களது வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றனர்.
இந்த நிலையில் பணத்தை கொடுத்தவர்களான காரைக்குடி, அழகப்பாபுரத்தைச் சேர்ந்த ஷீயாம், தேவக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் புதன்கிழமை உடைமைகளை எடுக்க வந்த போது ராஜேஷ்கண்ணனின் பேச்சியிலும் நடத்தையிலும் அவர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
உடனே மற்ற நபர்களிடம் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு அனைவரையும் வரவழைத்தனர். பின்பு அவர்கள் ராஜேஷ்கண்ணன் வீட்டின் முன்பு திரண்டு கட்டிய பணத்தை உடனே திருப்பி தரவேண்டும் என்று கூறிய அவரது வீட்டை முற்றுகையிóட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த ராஜேஷ்கண்ணன் இரவு வீட்டிற்கு வராமல் தலைமறைவானர்.
இந்த போராட்டம் வியாழக்கிழமை காலை வரை நீடித்துக்கொண்டு இருந்தது. இதையறிந்த விமான நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ராஜேஷ்கண்ணன் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் ராஜேஷ்கண்ணனை பிடித்து காரைக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பிரபல நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்யப்பட்ட ரூ.23 லட்சம் மதிப்புள்ள போலி செல்பேசிகள் பறிமுதல்:6 பேர் கைது

சேலத்தில் பிரபல நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட ரூ.23 லட்சம் மதிப்புள்ள போலி செல்பேசிகள், இதர பொருள்களை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 சீனாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த சாம்சங் நிறுவனத்தின் போலி செல்பேசிகள், அதற்கான பயன்பாட்டு பொருள்களை சென்னையில் போலீஸார் அண்மையில் பறிமுதல் செய்தனர்.
 பிரபல நிறுவனங்களின் பெயரில் போலிகளைத் தடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக் குழுவினரின் தகவலை அடுத்து போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
 சென்னையைப் போலவே சேலத்திலும் போலி சாம்சங் செல்பேசிகள் விற்பனை செய்யப்படுவது குறித்து திருட்டு விடியோ தடுப்புப் பிரிவுக்கு அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக் குழுவினர் தகவல் கொடுத்தனர். இது குறித்து விசாரணை நடத்தும்படி சேலம் திருட்டு விடியோ தடுப்புப் பிரிவு ஆய்வாளர் சிவபாலனுக்கு உத்தரவிடப்பட்டது.
 இதையடுத்து அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக் குழுவின் தென்னிந்தியாவுக்கான பொது மேலாளர் ஆர்.சதீஷ்குமார், மேலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையிலான 8 பேர் குழுவினர் முன்னிலையில், சேலம் திருட்டு விடியோ தடுப்புப் பிரிவு ஆய்வாளர் சிவபாலன் உள்ளிட்ட காவல்துறையினர் உதவியுடன் புதிய பேருந்து நிலைய பகுதி கடைகளில் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
 அப்போது அங்குள்ள 6 கடைகளில் சாம்சங் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட போலியான சீனா தயாரிப்பு செல்பேசிகள், சார்ஜர்கள், ஹெட்போன், இயர்போன், ப்ளூ டூத் உள்ளிட்ட செல்பேசி தொடர்பான இதர பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்த அனைத்து பொருள்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 இது தொடர்பாக சின்னத் திருப்பதியைச் சேர்ந்த க.கருப்பசாமி (35), மெய்யனூர் பூ,ராஜிவ் சிங் (25), செவ்வாய்ப்பேட்டை ம.மகாவீர் (29), பள்ளப்பட்டி பெ.பிரபு (29), வீரபாண்டியார் நகரைச் சேர்ந்த ப. நரேஷ் (32), வ.ரமேஷ்குமார் (34) ஆகிய 6 நபர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
 பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.23 லட்சம். சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த பொருள்களை மொத்தமாக வாங்கி வந்து, அதில் பிரபல நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டி இவர்கள் விற்பனை செய்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

897 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை பதவி உயர்வு கலந்தாய்வு

தமிழகம் முழுவதும் உள்ள 897 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை (டிச.28) நடைபெற உள்ளது. 
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வட்டார வள மையங்களில் மேற்பார்வையாளர்களாக பணியாற்றி வந்த 47 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருந்த 17 ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் டிசம்பர் 28-ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்-லைன் மூலம் நடத்தப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர்கள் 897 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வும் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.

ஜன.15 வரை மலை ரயில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க வரும் ஜனவரி 15-ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டு விட்டதால், பொங்கலுக்குப் புதிதாக தட்கல் முறையில் 9 சீட்டுகள் மட்டும் முன்பதிவு செய்யும் முறை வியாழக்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 நீலகிரி மலை ரயிலில் பயணிக்க உள் நாடு மட்டுமில்லாது வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் பயணிக்க ஆர்வம் காட்டிவரும் நிலையில், மேட்டுப்பாளையம் முதல்  உதகை வரை பயணிக்க, 2014 ஜனவரி 15 வரையிலான முன்பதிவு வியாழக்கிழமையுடன் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், இதில் பலர் காத்திருப்பு பட்டியலில் உள்ளதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக டிக்கெட் கிடைக்காத சுற்றுலாப் பயணிகள், மலை ரயிலில் பயணிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 நீலகிரி மலை ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை 3 பெட்டிகளுடனும், குன்னூரில் இருந்து இரண்டு பெட்டிகள் கூடுதலாகவும் இணைக்கப்பட்டு 300 பயணிகளுடன் உதகைக்கு பயணிப்பது வழக்கம். தற்போது முன்பதிவு முடிந்த நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து பயணிக்க தட்கல் முறையில் முன்பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 சாதாரணக் கட்டணம் ரூ.25 என்றிருக்கும் நிலையில் தட்கலுக்கு ரூ.40 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை முதல் 9 தட்கல் டிக்கெட்டுகள் மட்டும் புக்கிங் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக தட்கல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறது.
தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையாளர் சுதீர் திரிபாதி தலைமையில், தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள், வாக்குச் சாவடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களில் அரசியல் கட்சிகளின் கருத்துகள் கோரப்படவுள்ளன. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. முன்னதாக, இதற்கான பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த நிலையில், திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை: மக்களவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தென் மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கோரும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையாளர் சுதீர் திரிபாதி தலைமை வகிக்கிறார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
கட்சிகள் எவை தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது கட்சிகள் உள்ளன. அதிமுக, திமுக, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய முற்போக்கு திராவிட கழகம், காங்கிரஸ், பாஜக, தேசிய வாத காங்கிரஸ் ஆகிய ஒன்பது கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியில் இருந்தும் தலா இரண்டு பேர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். மக்களவைத் தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது, வாக்குச் சாவடி மையங்களை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கவுள்ளளனர்.
மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை: அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் காலையில் ஆலோசனை முடிந்தபிறகு, பிற்பகலில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சுதீர் திரிபாதி கலந்துரையாடுகிறார். தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர்களிடம் கருத்துகள் கேட்கப்படவுள்ளன. தலைமைச் செயலகத்தில் இருந்து விடியோ கான்பரன்சிங் முறை மூலம் ஒவ்வொரு ஆட்சியரிடமும்  தனித்தனியாக இந்த ஆலோசனையை சுதீர் திரிபாதி நடத்துகிறார்.

அமெரிக்கர் கடத்தப்பட்ட விவகாரம்: புதிய விடியோவை வெளியிட்டது அல்-காய்தா

பாகிஸ்தானில் 2011ஆம் ஆண்டு கடத்தப்பட்ட, அமெரிக்க தொண்டு நிறுவன அதிகாரியின் புதிய விடியோவை அல்-காய்தா வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள, பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வரும் அமெரிக்க தொண்டு நிறுவனத்தின் ஆலோசகராக வாரன் வெய்ன்ஸ்டீன், 9 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார்.
அவர் லாகூரில் உள்ள அவரது வீட்டில், அல்-காய்தா தீவிரவாதிகளால் 2 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டார். தற்போது அவர்களிடம் பிணைக் கைதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் வாரன் வெய்ன்ஸ்டீன் பேசிய புதிய விடியோவை அல்-காய்தா வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அல்-காய்தாவால் கடத்தப்பட்ட நான், தற்போது அமெரிக்காவால் முற்றிலுமாக மறந்து கைவிடப்பட்டுள்ளேன். பாகிஸ்தான் மீதான வான்வெளித் தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தினால், அதற்கு கைமாறாக எனது உறவினர்களைச் சந்திக்க அல்-காய்தா பயங்கரவாதிகள் ஏற்பாடு செய்வாத உறுதியளித்துள்ளனர். அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, என்னை விடுவிக்க அல்-காய்தா அமைப்பிடம் பேச்சு நடத்த வேண்டும். மேலும் அதிபர் ஒபாமா பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று வாரென் வெய்ன்ஸ்டீன் அந்த விடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே விடியோவில் அல்-காய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி கூறியிருப்பதாவது:
வாரன் வெய்ன்ஸ்டீன் விடுவிக்கப்பட வேண்டுமானால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா போன்ற நாடுகள் மீது வான்வெளித் தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று ஜவாஹிரி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக வாரன் வெய்ன்ஸ்டீன் பேசிய வீடியோவை 2012ஆம் ஆண்டு அல்-காய்தா அமைப்பு வெளியிட்டது. தற்போது புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மாவோவின் 120வது பிறந்தநாள் விழா

சீன முன்னாள் அதிபர் மாவோவின் (மாசே துங்) 120வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினர்.
தியான்மென் சதுக்கத்தில் உள்ள மாவோவின் நினைவிடத்திற்கு வியாழக்கிழமை காலை வந்து ஜி ஜின்பிங் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தியதாகவும், மாவோவின் பெருமை மிகு சாதனைகளை அவர்கள் அப்போது நினைவு கூர்ந்ததாகவும் சின்குவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மாவோவின் பிறந்தநாள் விழாவை எளிமையாக கொண்டாடும்படி அதிபர் ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டிருந்ததார். இதனால் அவரது பிறந்தநாள்விழா பிரமாண்டமாக கொண்டாடப்படவில்லை.
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருங்கிய பத்திரிகையாக கருதப்படும் தி க்ளோபல் டைம்ஸ், "மாவோ தனது ஆட்சிக்காலத்தில் தவறிழைத்தாகவும், அதேசமயம் அவரை குற்றம்சாட்டுபவர்கள், கடந்த 60 ஆண்டுகளில் சீனா அடைந்துள்ள வளர்ச்சியை மறந்து விடக்கூடாது' என்றும் கருத்து கூறியுள்ளது.
பெய்ஜிங்கில் வழக்கமாக மாவோ பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெறும் கலைநிகழ்ச்சிக்கான மைதானத்தில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டிருந்தது. அதில் இடம்பெற்றிருந்த "சூரியன் சிகப்பாக உள்ளது, தலைவர் மாவோ நமது அன்புக்குரியவர்' என்ற வாசகம் நீக்கப்பட்டு,"எனது நாட்டின் கடவுள்' என்ற வாசகம் சேர்க்கப்பட்டிருந்தது. மாவோவின் 120வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அங்கு வைக்கப்பட்டிருந்த அலங்காரப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அதற்கு பதிலாக புதிய சீனா உருவாக்கப்பட்டதன் 65வது ஆண்டு விழா என்பதை முன்னிலைப்படுத்தும் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
மாவோ பிறந்த மாகாணமான ஹுனானில் அவரது பிறந்தநாளையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், விருந்தும் நடைபெற்றன.

பயணி தவறவிட்ட ரூ.1.85 கோடியை ஒப்படைத்த ஓட்டுநர்

அமெரிக்காவில் பயணி தவறவிட்ட 3 லட்சம் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.85 கோடி), நேர்மையான வாடகைக் கார் ஓட்டுநர் ஒருவர் திரும்ப ஒப்படைத்துள்ளார்.
நெவாடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் பகுதியில், கெரார்டோ காம்போயா என்பவர் வாடகைக் கார் ஓட்டி வருகிறார்.
இவரது காரில் திங்கள்கிழமை ஏறிய பயணி ஒருவர், தான் கொண்டு வந்திருந்த பணப்பையை விட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து பணப்பையைக் கண்டறிந்த கெரார்டோ காம்போயா, அதை தனது வாடகைக் கார் நிறுவனத்தில் ஒப்படைத்தார்.
இந்நிலையில் பணப்பையைத் தொலைத்தவரைக் கண்டறிந்து, வாடகைக் கார் நிறுவனம் திரும்ப ஒப்படைத்தது. மேலும், ஓட்டுநர் கெரார்டோ காம்போயாவின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு 1,000 டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.61 ஆயிரம்) வாடகைக் கார் நிறுவனம் பரிசாக வழங்கியது என்று "லாஸ் வேகாஸ் சன்' நாளிதழ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் கலவரம்: போலீஸ் அதிகாரி சாவு

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், போலீஸாருக்கும் வியாழக்கிழமை நடைபெற்ற மோதலில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். கலவரக்காரர்களைக் கலைக்க போலீஸார் ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு துப்பாக்கியால் சுட்டதில் 48 எதிர்ப்பாளர்கள் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, தேர்தலை ஒத்திவைக்குமாறு தாய்லாந்து அரசிடம் தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.
தாய்லாந்தில் பிப்ரவரி 2-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பதிவு செய்வதற்கு டிசம்பர் 27-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏதுவாக, பாங்காக்கில் உள்ள தாய்லாந்து-ஜப்பான் விளையாட்டு மைதானத்தில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு, 27 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தங்களது வேட்பாளர்கள் பட்டியலை பதிவு செய்வதற்காக வியாழக்கிழமை கூடியிருந்தனர்.
கடந்த திங்கள்கிழமை இதேபோல பதிவு செய்ய வந்த அரசியல் கட்சியினரை எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டு தடுக்க முயன்றனர். இதனால், இந்தமுறை அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அரசியல் கட்சியினர் உள்ளே வந்ததும் மைதானத்தின் கதவுகள் பூட்டப்பட்டன. மேலும், மைதானக் கதவுகளின் முன்பு போலீஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டன.
எனினும், துப்பாக்கி மற்றும் கற்களுடன் அங்கு சென்ற எதிர்ப்பாளர்கள், விளையாட்டு மைதானத்தின் பூட்டுகளை உடைத்து உள்ளை நுழைய முயன்றனர். தடுக்க முயன்ற போலீஸார் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் உயர் போலீஸ் அதிகாரி நரோங் பிடிசிட் (45) உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து, போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு துப்பாக்கியால் பலமுறை சுட்டும் கூட்டத்தைக் கலைத்தனர். இதில் 48 எதிர்ப்பாளர்கள் காயமடைந்தனர்.தாய்லாந்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், போலீஸாருக்கும் வியாழக்கிழமை நடைபெற்ற மோதலில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். கலவரக்காரர்களைக் கலைக்க போலீஸார் ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு துப்பாக்கியால் சுட்டதில் 48 எதிர்ப்பாளர்கள் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, தேர்தலை ஒத்திவைக்குமாறு தாய்லாந்து அரசிடம் தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.
தாய்லாந்தில் பிப்ரவரி 2-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பதிவு செய்வதற்கு டிசம்பர் 27-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏதுவாக, பாங்காக்கில் உள்ள தாய்லாந்து-ஜப்பான் விளையாட்டு மைதானத்தில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு, 27 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தங்களது வேட்பாளர்கள் பட்டியலை பதிவு செய்வதற்காக வியாழக்கிழமை கூடியிருந்தனர்.
கடந்த திங்கள்கிழமை இதேபோல பதிவு செய்ய வந்த அரசியல் கட்சியினரை எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டு தடுக்க முயன்றனர். இதனால், இந்தமுறை அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அரசியல் கட்சியினர் உள்ளே வந்ததும் மைதானத்தின் கதவுகள் பூட்டப்பட்டன. மேலும், மைதானக் கதவுகளின் முன்பு போலீஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டன.
எனினும், துப்பாக்கி மற்றும் கற்களுடன் அங்கு சென்ற எதிர்ப்பாளர்கள், விளையாட்டு மைதானத்தின் பூட்டுகளை உடைத்து உள்ளை நுழைய முயன்றனர். தடுக்க முயன்ற போலீஸார் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் உயர் போலீஸ் அதிகாரி நரோங் பிடிசிட் (45) உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து, போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு துப்பாக்கியால் பலமுறை சுட்டும் கூட்டத்தைக் கலைத்தனர். இதில் 48 எதிர்ப்பாளர்கள் காயமடைந்தனர்.

"இந்தியா}பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானது'

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தஸ்னீம் அஸ்லாம் வியாழக்கிழமை கூறியதாவது:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான பொது இயக்குனர்களின் (டிஜிஎம்ஓ) சந்திப்பு டிசம்பர் 24-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, எல்லையில் நிலவும் பதற்றம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
எல்லையில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவது முக்கியம் என்பதை இரு தரப்பு அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டனர். மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க இரு நாட்டு அதிகாரிகளும் ஹாட்லைன் தொலைபேசி மூலம் அவ்வப்போது தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
தற்போது நடைபெற்றதுபோல, அடிக்கடி ராணுவ அதிகாரிகள் சந்தித்து நிலவரங்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். சிறிய விஷயங்களை பெரிது படுத்தாமல், அதை கீழ் மட்டத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் என்று தஸ்னீம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறியதாவது:
இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக சாதகமான நிலையை ஏற்படுத்தி வருகிறது.
அண்டை நாடுகளுடனான நல்லுறவை மேம்படுத்துவதற்காக பாகிஸ்தான் அரசு தேசிய பாதுகாப்புக் கொள்கையை வகுத்து வருகிறது என்றார்.
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான பொது இயக்குனர்கள் சந்தித்துக் கொள்வது கடந்த 14 ஆண்டுகளில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமிழக பத்திரிகையாளர் கைது

இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை படம் பிடித்ததாகக் கூறி அந்நாட்டு போலீஸாரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹானா கூறியதாவது:
தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த நபர் ராணுவ முகாம்கள், சாலைகள், போரினால் பாதிப்புக்குள்ளான கட்டடங்கள் ஆகியவற்றை படம் பிடித்ததற்காக கைது செய்யப்பட்டார். சுற்றுலாவுக்கான விசாவில் அவர் இலங்கை வந்துள்ளார். விசா விதிமுறைகளை மீறியதன் காரணமாக கைது செய்யப்பட்ட அவர், குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று ரோஹானா கூறினார்.
கிளிநொச்சி, 2009ஆம் ஆண்டு வரையில் விடுதலைப் புலிகளின் அதிகார மையமாக விளங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் போரில் இறந்தவர்களை கணக்கெடுக்க வடக்கு மாகாண அரசு முடிவு

இலங்கையில் உள்நாட்டுப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை தனியாகக் கணக்கெடுக்கப் போவதாக வடக்கு மாகாண அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 37 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் குறைந்தபட்சம் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டதாகவும், 2009இல் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற கடைசி மாதங்களில் சுமார் 40,000 அப்பாவி மக்கள் இறந்ததாகவும் ஐ.நா. மதிப்பிட்டது.
உள்நாட்டுப் போரில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்ற விவகாரம் தொடர்பான கருத்து வேறுபாடுகள், கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் எழுந்தன. இதையடுத்து, ராஜபட்ச அரசு போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உள்பட மக்கள்தொகையைக் கணக்கெடுக்கும் பணியை அவசரமாகத் தொடங்கியது.
இந்நிலையில், உள்நாட்டுப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை தனியாகக் கணக்கெடுக்கப் போவதாக வடக்கு மாகாண அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
இது குறித்து மாகாண அரசு அதிகாரிகள் கூறுகையில், ""அதிபர் ராஜபட்ச நடத்த உத்தரவிட்டுள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பு உண்மையைத் திரிக்கும் வகையிலேயே அமைந்திருக்கும். அதன் விதிமுறைகளே இதற்குக் காரணம். எனவே நம்பகமான வேறொரு கணக்கெடுப்பு தேவைப்படுகிறது'' என்று தெரிவித்தனர்.
""நாங்கள் நடத்தவுள்ள கணக்கெடுப்புக்கான செயல்திட்டத்தை மாகாண கவுன்சில் உருவாக்கும்'' என்று வடக்கு மாகாணக் கவுன்சிலின் மூத்த உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன் கூறினார்.
இதனிடையே, போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காகவே இலங்கை அரசு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சுரேஷ் பிரேமசந்திரன் குறைகூறியுள்ளார்.

ரஷிய ராணுவ விமான விபத்து: 9 பேர் பலி


ரஷிய சரக்கு விமானம் ராணுவ கிடங்கு கட்டடத்தில் மோதியதில் 9 பேர் பலியானார்கள்.

ரஷியாவின் சைபீரிய மாகாணம் நோவோசிபிர்ஸ்க் நகரில் இருந்து விமானி உள்பட 9 பேருடன் ராணுவ சரக்கு விமானம் ஒன்று இர்குட்ஸ்க் நகருக்கு புறப்பட்டது.
அந்த விமானம் இர்குட்ஸ்க் நகரில் உள்ள ராணுவக் கிடங்கு கட்டடத்தின் மீது திடீரென மோதியது. இதில் விமானத்தில் இருந்த 9 பேரும் பலியானதாக ரஷிய அரசு தெரிவித்துள்ளது.
ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், ""அந்த விமானம் ஆட்டோ உதிரி பாகங்கள் வைக்கப்பட்டிருந்த இரண்டு கட்டடங்களின் மீது மோதியது. இதில் தரைத்தளத்தில் இருந்த யாரும் காயமடையவில்லை'' என்றார்.

இலங்கையில் தமிழக மீனவர்கள் 171 பேரின் காவல் நீட்டிப்பு


இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 171 பேரின் காவல் ஜனவரி 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தமிழக மீனவர்களின் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து இலங்கையில் உள்ள திரிகோணமலை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களது காவலை ஜனவரி 6ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தற்போது 227 தமிழக மீனவர்கள், 77 விசைப் படகுகளுடன் இலங்கை அரசின் பிடியில் உள்ளனர்.
தென்னிந்திய மாநிலங்களில் இலங்கையைச் சேர்ந்த 213 மீனவர்கள், 40 விசைப் படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றில் தமிழகத்தில் மட்டும் 170 இலங்கை மீனவர்களும், 32 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக இலங்கை மீன் வளத்துறை இயக்குநர் நிமல் ஹெட்டியராச்சி தெரிவித்தார்.

மேற்கு வங்கம்: குண்டு வெடிப்பில் 5 பேர் பலி

மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர்.
மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியை அடுத்த செயின்ட் பால் பள்ளி அருகே வியாழக்கிழமை மாலை சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த 5 பேர் பலியானார்கள். 6 பேர் காயமடைந்ததாக காவல்துறை ஐஜி சசிகாந்த் பூஜாரி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ""நாங்கள் இது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். விசாரணைக்குப் பிறகுதான் இது பயங்கரவாதிகளின் தாக்குதலா? அல்லது சைக்கிளில் வெடிகுண்டை ஏற்றிச் சென்றபோது அது தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததா? என்பது பற்றி தெரியவரும்'' என்றார்.

தேவயானி விவகாரம்: விசா மோசடி கடுமையான குற்றமல்ல


இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீது சுமத்தப்பட்ட விசா மோசடியை ஒரு கடுமையான குற்றமாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று அமெரிக்காவின் அலபாமா மாகாண முன்னாள் அரசு வழக்குரைஞர் ஜி.டக்ளஸ் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசு தேவயானி மீதான வழக்கைத் திரும்பப் பெறுவது சாத்தியமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜி.டக்ளஸ் ஜோன்ஸ் வாஷிங்டனில் பிடிஐ செய்தியாளரிடம் வியாழக்கிழமை கூறியது:
தேவயானி, அவரின் பணிப் பெண் சங்கீதாவை உடல் ரீதியாகத் துன்புறுத்தினார் என்பதற்காக இந்த வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
பணிப் பெண் சங்கீதாவுக்கு குறைந்த சம்பளம் வழங்கியதாக கூறப்படுவதை குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதைக் கடுமையான குற்றமாக கருத அவசியமில்லை.
வியன்னா தீர்மானத்தின்படி குற்றம் என கூறுவதற்கு சரியான வரையறை இல்லை. சம்பந்தப்பட்ட நாடுகளே இதற்கான வரையறையை வகுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தேவயானி வெளிநாட்டிற்குச் சென்று விடக் கூடாது என்பதற்காக கூட அவரை அமெரிக்க போலீஸார் கைது செய்திருக்கலாம்.
இந்த வழக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானதாகும். இதை கையாள்வது மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்று ஜோன்ஸ் தெரிவித்தார்.
தேவயானி மீதான வழக்கை அமெரிக்கா வாபஸ் பெற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஜோன்ஸ், ""தேவயானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை திரும்பப் பெறுவது சற்று கடினமானதே என்றாலும் அது முடியாத காரியமில்லை'' என்று ஜோன்ஸ் தெரிவித்தார்.

ஐந்தாண்டு திட்டம்: மானிய நிதி ஒதுக்கீட்டில் 1% குறைப்பு






12-ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் (2012-17) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மானியங்களுக்குச் செலவிடும் நிதி ஒரு சதவீதம் குறைக்கப்படும் என்று மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா கூறினார்.
சென்னை பொருளாதார கல்வி மையம் சார்பில் ராஜா ஜே. செல்லையா முதலாவது நினைவு சொற்பொழிவு கோட்டூர்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் ஆற்றிய உரை:
உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மட்டுமே அரசு நிதி செலவிடப்பட வேண்டும். வளர்ச்சித் திட்டங்களுக்காக அடுத்த 10 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீத நிதி தேவைப்படும். எனவே, மானியங்களுக்குச் செலவிடப்படும் நிதியை 2.6 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேரடி மானியம்: பிற வளரும் நாடுகளைப் பின்பற்றி மானியங்களை நேரடியாக பணமாக வழங்கும் திட்டம் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கப்படும் பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே மானியத் தொகை செலுத்தப்படும்.
இதன்மூலம் நலத் திட்டங்களின் பயன் நேரடியாக பயனாளிகளுக்கே சென்று சேரும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி உள்ளிட்டப் பொருள்களில் 30 சதவீதம் வெளிச்சந்தைகளுக்குப் போகிறது. ஆன்-லைன் மூலமாக நடைபெறும் பணப் பரிவர்த்தனையால் இதுபோன்ற தவறுகளுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்தத் திட்டம் விரும்புகிற மாநிலங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும்.
தொழிலாளர் கல்வியறிவு: நமது நாட்டில் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே ஐ.டி. உள்ளிட்ட துறைகளில் திறன்மிக்கப் பணியாளர்களாக உள்ளனர். ஆனால், பெருவாரியான தொழிலாளர்கள் தொழில் பயிற்சி திறன் குறைந்தவர்களாகவே உள்ளனர்.
தொழிலாளர்களின் சராசரி கல்வியறிவு 5-ம் வகுப்பு என்ற அளவிலேயே உள்ளது. ஆனால், சீனாவில் 8-ம் வகுப்பு என்ற அளவில் உள்ளது. நமது தொழிலாளர்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், தொழில்திறன் மிக்கவர்களாகவும் இருந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி பெற முடியும்.
வரி விதிப்பில் மாற்றம்: வரி விதிப்பு முறைகளில் பெரிய மாறுதல் தேவைப்படுகிறது. தனிநபர் வரிவிதிப்பில் பிறநாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் மோசமாக இல்லை. தொழில் நிறுவனங்களுக்கான வரிவிதிப்பு உலக அளவில் 20 சதவீதமாக இருக்கும்போது, இங்கு 34 சதவீதமாக உள்ளது.
இந்த வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தும் சீர்திருத்தம், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்பதுதான் எனது கருத்து. இந்த வரிவிதிப்பை அமல்செய்வது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இருந்த இடைவெளி இன்னமும் தொடர்கிறது. ஆனால், இந்தப் பிரச்னையில் அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த கருத்தை எட்டுவார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.
பொருளாதார நிலை: இந்தியா அதிகக் கடன் வாங்கியுள்ள நாடுகளின் வரிசையில் உள்ளது. வரி சீர்திருத்தம் மேற்கொள்ளும் அதேநேரத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும், தனியார் துறையினரையும் ஈர்க்க வேண்டும்.
உலகமயமாக்கலில் நன்மைகள் உள்ளது போலவே சில தீமைகளும் உள்ளன. ஏதோ ஒரு நாட்டில் ஏற்படும் நிதிச்சிக்கல் நமக்கும் பிரச்னையை ஏற்படுத்தலாம். எனவே, இதைச் சமாளிப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகளில் வருவாயை அதிகரிப்பதோடு, மானியங்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைக்க வேண்டும். அதன்மூலம், மொத்தக் கடன் அளவையும், நிதிப் பற்றாக்குறையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். உலகளவில் நிதிநெருக்கடி ஏற்பட்டால், அதைச் சமாளிக்கும் திறனுடன் நமது பொருளாதாரம் இருக்க வேண்டும் என்றார் அவர்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் சி.ரங்கராஜன், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்புத் தலைவர் ஜவஹர் வடிவேலு, சென்னை பொருளாதார கல்வி மைய இயக்குநர் சண்முகம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
டீசல் விலை: மேலும் உயர்த்த முடிவு
சர்வதேச சந்தையைப் பொருத்து டீசல் விலையை கூடுதலாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத் தலைவர் சி.ரங்கராஜன் கூறினார்.
சென்னை பொருளாதார மையத்தில் நடந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டபின் அவர் செய்தியாளர்களிடம் பேசியது:
ரூபாயின் மதிப்பு சரிந்ததால் சர்வதேச சந்தையில் டீசலின் விலைக்கும், இங்குள்ள விலைக்கும் அதிக வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு டீசல் விலையை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாதந்தோறும் 50 பைசா உயர்த்துவதற்குப் பதிலாக சற்று அதிகமாக விலை நிர்ணயிக்கப்படும். இது விரைவில் அமலாக்கப்படும் என்றார் அவர்.