4.12.13

ஆர்யா – ஜீவாவின் பெருந்தன்மை!

ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமானவர் டைரக்டர் ராஜேஷ். அந்த படத்தில் நட்புக்காக நடித்த ஆர்யாவை வைத்து, அடுத்து, பாஸ் என்ற பாஸ்கரன் என்ற ஹிட் படத்தையும் கொடுத்தார். அவர், சமீபத்தில் இயக்கிய, ஆல் இன் ஆல் அழகுராஜா வெற்றி பெறவில்லை.
அதனால், தனது ஹிட் படங்களில் நடித்த ஜீவா – ஆர்யா இருவரிடமும், தன் அடுத்தடுத்த படங்களில் மீண்டும் நடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம் ராஜேஷ். இதற்கு, இருவருமே எந்த மறுப்புமின்றி, உடனே கால்ஷீட் கொடுத்துள்ளனராம்.
இவர்களோடு, ராஜேஷ் இதுவரை இயக்கிய நான்கு படங்களிலுமே நடித்த சந்தானமும், எப்போது கேட்டாலும் கால்ஷீட் தருவதாக முன்வந்துள்ளாராம்.அழகுராஜா படத்தின் தோல்வியால் சோர்ந்திருந்த ராஜேஷ், மேற்படி நடிகர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்திருப்பதால், மீண்டும் பழைய உற்சாகத்துக்கு மாறியுள்ளார்.

பிரியாணி வயது வந்தவர்களுக்கு மட்டும்



பிரியாணி படத்தின் சில காட்சிகளை குழந்தைகள் பெற்றோர் துணையுடன்தான் பார்க்க வேண்டும் எனக்கூறி படத்துக்கு யுஏ சான்றிதழ் தந்துள்ளது தணிக்கைக்குழு.
டிசம்பர் 20 ஆம் தேதி பிரியாணி வெளியாகிறது. சகுனி, அலெக்ஸ் பாண்டியன், அழகுராஜா என்று ஸ்டுடியோ கிriiன் தயாரிப்பில் தொடர் தோல்விகளை சந்தித்த கார்த்திக்கு இந்தப் படம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம்.

Biriyani Shooting Spot








EGO Tamil Movie Trailer

மூளை



Brain
ஒருவர் கைகால்கள் செயலிழந்து போகும்போது அதைப் பாரிசம் அல்லது பக்கவாதம் என்று வீட்டில் உள்ளவரே கணித்து சிகிச்சையை தள்ளிப் போடுகின்றனர். அதற்கு ஒரு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனென்றால் அதனால் உடனடியாக இறப்பு ஏற்படாது அன்ற எண்ணம். அதே இருதயப்பகுதியில் வலி என்றால் பதறி புரண்டு மருத்துவரைப் பார்க்க ஓடுகின்றனர். ஏன் இந்தப் பாகுபாடு?
இதய நோயாளி நடக்கலாம், பேசலாம், தன் வேலைகளை செய்து கொள்ளலாம். ஆனால் கை, கால் பாரிசம் ஆனவரோ, அவர்களின் அன்றாட செயல்களை செய்துக்கொள்வது சிரமம். அதற்கு அடுத்தவரின் துணை வேண்டுகிறது. மனதளவில் பாரிசம் ஏற்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் குன்றி குறுகி நிற்கின்றனர். ஏன் இந்த பாகுபாடு..?
ஆங்கிலத்தில் GOLDEN HOUR என்று கூறப்படும் நேரம் மிகவும் முக்கியமானது. ஒருவர் விபத்தில் அடிபட்டாலோ, இதய நோயால் மாரடைப்பு ஏற்பட்டாலோ, அல்லது பாரிசம் ஏற்பட்டாலோ, அந்த முதல் ஒரு மணி நேரக் கவனிப்பு அவருடைய குணமடைதலுக்கு துணை செய்கின்றது. பாரிசம் ஏற்பட்டவர், முதல் ஒரு மணி நேரத்தில் மருத்துவம் பெற்றால் அவருடைய குறை முற்றிலும் குணமாகலாம். ஏன் எல்லோரும் போல் நன்றாக நடந்து பேசி வேலை செய்யமுடியும்.
உதாரணமாக எங்கள் மருத்துவமனைகளில் ஒரு 35 வயது நபர் இடது பக்க பாரிசத்துடன் 15 நிமிடங்களில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்து, அவருக்கு சிகிச்சை உடனடியாக தொடரப்பட்டது, அவர் 10 நாட்களில் முழுவதுமாக குணமாகி வீட்டுக்கு சென்றார். இன்று அவர் என்ன தொழில் செய்துக்கொண்டிருந்தோரோ அதையே தொடர்ந்து செய்து வருகின்றார்.
பாரிசத்திற்கு இன்னொரு காரணம் உண்டு. அதாவது மூளையில் மண்டை ஒட்டிற்கும் மூளைக்கும் இடையே இரத்தம் சேர்ந்து அது அழுத்தம் கொடுக்கின்றது. அதை Subdural Hematoma என்பர்.
எதனால் ஏற்படுகின்றது? (Chronic subdural Hemation) தலைக்காயம் பட்டால் ஏற்படலாம், ஆனால் 6 வாரத்தில் இருந்து. 11\2 வருடம் வரை வரலாம். இது மெதுவாக கசிந்து கட்டியாகும்போது தான் தன்மையை காட்டுகின்றது. அது பெரிதாகும்போது எந்த பகுதியில் உள்ளதோ அதற்கு எதிர்பகுதி கை கால்கள் செயல் இழந்து போகின்றன. கோமா நிலை ஏற்படுகின்றது.
இந்த நோயாளியை உடனடியாக CT scan படம் எடுத்து பார்த்தால், இந்த காரணம் தெரியும். அதை உடனடியாக அறுவை சிகிச்சையின் மூலம் அப்புறப்படுத்தினால் நோயாளி தன் சுய நினைவை அடைந்து, கை, கால் பாரிசம் குறைந்து நன்றாக குணமடைவர்.
எங்களிடம் ஒரு 70 வயது பெரியவர் கொண்டுவரப்பட்டார். அவர் நினைவு இல்லாமல் கோமா நிலையில் இருந்தார். அவருக்கு வலது கை கால்களில் செயல் இல்லை. அவருடைய மூளைப்படம், இடது மூளைப்படத்தில் இரத்தக்கட்டி இருப்பது தெரிந்தது. அதன் அளவு பெரியதாக இருந்ததால் இடது மூளை வலது மூளையை தள்ளிக்கொண்டு இருந்தது. நோயாளியின் மகன்கள் அவர் குணமடைவாரா என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் இந்த அறுவை சிகிச்சையினால் அவர் முற்றிலும் குணமடைவார். மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் போதே அவர் நினைவு பெறுவார் என்று கூறி அறுவை சிகிச்சை செய்தேன். மூளையின் சவ்வை திறக்கும்போது இரத்தம் வெளிவந்தது. அவ்வாறு வெளிவரும்போதே அவர் நினைவு திரும்பியது, சப்தம் போட ஆரம்பித்தார். அறுவை சிகிச்சை முடிந்து வெளிவரும்போது அவரின் மகன்களுடன் பேசினார். 5 ஆண்டுகளுக்கு பின்னும் நன்றாக நடந்துகொண்டு சராசரி மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
பாரிசம் என்பது கை, கால், செயல் இழப்பை குறிக்கின்றது. அதற்கான காரணங்கள் ஏராளம். அதை மூளை படம் எடுப்பதால் தெரிந்து கொள்ளலாம். (Chronic subdural hematoma) நாள்பட்ட இரத்த கசிவினால் ஏற்பட்ட பாரிசம் அறுவை சிகிச்சை செய்தவுடன் குணமடையும். குடிப்பழக்கம் இருப்பவருக்கு இந்த இரத்த கசிவு சுலபமாக வருவதுண்டு. எனவே குடிப் பழக்கத்தை நிறுத்த பழகிக்கொள்ள வேண்டும். பாரிசம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சைக்கு நரம்பியல் நிபுணரிடம் கொண்டு செல்லுங்கள்.
உணர்வுபூர்வமாக எந்த விஷயத்தையும் அணுகுவதை விட அறிவு பூர்வமாக அணுகுவது தெளிவைத் தரும் தானே? எதைக் குறிப்பிடுகிறேன் என்கிறீர்கள்…? இதய நோய்க்கு தரும் முக்கியத்துவத்தை மூளை நோய்க்கும் தர வேண்டும் என்பதைத் தான் அதோடு குடிப்பழக்கம் குடியை மட்டும் கொடுப்பதில்லை. மூளையையும் பதம் பார்க்கிறது. குவாட்டர், லார்ஜ், ஸ்மால் இந்த வார்த்தைகளோடு இனி பாரிசம் என்ற வார்த்தையையும் சேர்த்து சியர்ஸ் சொல்லுங்கள். குடிப்பழக்கம் தானாக ஓடிவிடும்.

ஸ்ட்ரெட்ச் மார்க்

ஸ்ட்ரெட்ச் மார்க் என்பது நாம் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையாகும். குறிப்பாக பெண்கள், இந்த பிரச்சனைக்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதிலும் திடீரென உடல் எடை கூடுதல், அளவுக்கு அதிகமாக உடல் எடை குறைதல், பெண்மை அடைதல் அல்லது கருவுற்றல் போன்றவைகளால் சருமம் சுருங்கவோ அல்லது விரிவடையவோ செய்யும். அதன் விளைவாக சருமத்தின் பல பகுதிகளில் சிவப்பு அல்லது பழுப்பு நிற வரிகள் உண்டாகும். முக்கியமாக வயிறு, நெஞ்சு, தொடை மற்றும் கை பகுதிகளில் இதனை காணலாம். இந்த ஸ்ட்ரெட்ச் குறிகள் சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழப்பதால் உண்டாகிறது. இது அழகை பாதிப்பதால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இவ்வகை மார்க்குகளை நீக்க பல க்ரீம்களும், மருந்துகளும் சந்தையில் கிடைத்தாலும், அவைகள் எல்லாம் விலை உயர்ந்ததாக உள்ளது. மேலும் அதில் கலக்கப்பட்டுள்ள சின்தடிக் ரசாயனங்கள் சருமத்திற்கு ஆபத்தாக கூட முடியும். அதிலும் அதனை தொடர்ந்து பயன்படுத்தினால், பக்க விளைவுகள் இன்னும் மோசமாகத் தான் இருக்கும். அதனால் இவ்வகை மார்க்குகளை நீக்க சில வீட்டு சிகிச்சைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதிலும் சமயலறையில் உள்ள பொருட்கள் அல்லது அருகில் இருக்கும் கடைகளில் வாங்கி அந்த பொருட்களை கொண்டு ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கலாம்.
சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காண மிகவும் எளிய மருந்தாக விளங்குகிறது தண்ணீர். இது சருமத்தை நீர்ச்சத்துடன் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஈரப்பதம் இருப்பதால், சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழக்காமலும், வறட்சி அடையாமலும் இருக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் உடல் எடையை குறைக்கும் பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட வேண்டும். இதனால் சருமம் சுலபமாக விரிவடையவும், சுருங்கவும் செய்யும். ஆகவே எந்த ஒரு விரிவடையும் குறிகள் உண்டாகாமல் தடுக்கலாம்.
இயற்கை எண்ணெய்கள் மற்றும் பாதரச கலவைகளை பல வகையாக கலந்து மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் 30 மில்லி அளவு அவகேடோ, ஜோஜோபா, ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய், 6 சொட்டு சீமைச்சாமந்தி எண்ணெய் அல்லது 4 டீஸ்பூன் சுத்தமான ஆலிவ் எண்ணெய், 4 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து செய்த பேஸ்ட்டை பயன்படுத்தி மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கலாம். குறிப்பாக இதனை குளிக்கும் முன்பாகவோ அல்லது படுக்கும் முன்பாகவோ, இந்த கலவையை நன்றாக கலந்து ஸ்ட்ரெட்ச் குறிகளின் மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும். சீரான முறையில் இதனை மெதுவாக மசாஜ் செய்தால், இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமத்தில் ஸ்ட்ரெட்ச் குறிகள் நீங்கும்.
பாதிப்படைந்த பகுதிகளில் ஓட்ஸ் அல்லது ஆப்ரிக்காட் மூலம் செய்த ஸ்க்ரப்களை தேர்ந்தெடுத்து, சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்கி விட வேண்டும். எலுமிச்சை ஸ்கரப்பையும் இதற்கு பயன்படுத்தலாம். அதனை பயன்படுத்தும் முறையாவன எலுமிச்சையை கொண்டு நன்றாக உடலில் தேய்த்து எடுத்து, பின் சரும நெகிழ்ச்சிக்கான லோஷன், வைட்டமின் C அடங்கியுள்ள குழந்தைகளுக்கான எண்ணெய் போன்றவைகள் கலந்த கலவையை பயன்படுத்தி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் குளிப்பதற்கு முன் எலுமிச்சையை நன்றாக சருமத்தின் மீது தேய்த்து, 1-2 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விட வேண்டும். இதனால் அதிலுள்ள வைட்டமின் சி, சரும துளை வழியாக ஆழமாக உள்ளேறும். இது கொலாஜென் மற்றும் எலாஸ்டிக் பைபர்கள் பாதிப்படையாமல் உள்ளிறங்கும். இதனால் காலப்போக்கில் ஸ்ட்ரெச் குறிகள் நீங்கும்.
வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடும் போது, இதிலுள்ள ஆக்சிஜனேற்றத் தடுப்பான் மற்றும் கொலாஜென் தயாரிப்பு பண்பு, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மேலும் ஸ்ட்ரெட்ச் குறிகளை தடுக்கும். சருமத்தின் அழகை பாதுகாக்க வேண்டுமானால், அதிலுள்ள முக்கிய புரதமும், பைபர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். பொதுவாக வைட்டமின் ஏ, சி, டி3, ஈ மற்றும் போலிக் அமிலம் உள்ள உணவுகளை கர்ப்பக் காலத்தில் சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இது கருவின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் விளங்கும்.
இந்த வைட்டமின்கள் அடங்கிய உணவுகளை உண்ணுவதால், கொலாஜென் பைபர்களை உண்டாக்கும். இது சருமத்தின் செல்புறத்திலுள்ள இடங்களை வலுப்படுத்தும். இதனால் சரும பாதிப்புகளை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஸ்ட்ரெட்ச் குறிகளையும் நீக்கும். கேரட், கீரை, முலாம் பழம் என வைட்டமின் ஏ உள்ள உணவுகளை உண்டால், உடலில் அதிக அளவு கொலாஜென் நிலவும். சிட்ரஸ் பழங்கள், மிளகு, ப்ராக்கோலி என வைட்டமின் சி உள்ள உணவுகளை உட்கொண்டால், சருமத்திற்கு கொலாஜெனை அளிப்பதோடு, ஸ்ட்ரெட்ச் குறிகள் வேகமாக குணமாக்க வலிய ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக விளங்கும்.
வைட்டமின் ஈ உள்ள எண்ணெயை பயன்படுத்தியும் ஸ்ட்ரெட்ச் குறிகளை நீக்கலாம். வைட்டமின் ஈ, கொலாஜென் பைபர்களை தயாரிக்க ஊக்குவிப்பதாக இருப்பதால் பாதிப்படைந்த சரும திசுக்கள் மீண்டும் வளர்ச்சி பெற உதவும். மேலும் ஸ்ட்ரெட்ச் குறிகள் உண்டான இடங்களில் குறிகளை நீக்கவும் உதவும்.
ஜெனிஸ்டீன் என்ற பைட்டோ ஈஸ்ட்ரோஜென் பாலாடை கட்டி, சோயா பால், சோயா பீன்ஸ் மற்றும் இதர சோயா பொருட்களில் உள்ளது. இது கொலாஜென் தயாரிப்பதை அதிகரிக்க உதவும்.
செடிகளில் காணப்படும் மஞ்சள் நிறப் பசையான லுடீன் எனப்படும் பொருள், சருமம் பாதிப்படையாமல் காக்க ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக விளங்குகிறது என்று ஹார்வர்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதிலும் கரும்பச்சை காய்கறி மற்றும் இலை வகை கீரைகளான பசலைக் கீரை, கடுகு கீரை, வெண்டைக்காய், செலரிக் கீரை, லெட்யூஸ், பச்சை பட்டாணி, ஆலிவ், அவகேடோ, கிவி, நூல்கோல் ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இது சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரித்து, சுருக்கம் மற்றும் ஸ்ட்ரெட்ச் குறிகளை தடுக்கும்.
ஸ்ட்ரெட்ச் குறிகள் அரிப்பை ஏற்படுத்தும். அதனால் இது குணமாகும் காலமும் அதிகரிக்கும். ஸ்ட்ரெட்ச் குறிகள் ஏற்படுத்தும் அரிப்பை உடனடியாக நீக்க, அதன் மேல் தேங்காய் எண்ணெயை தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின்பு குளிக்க வேண்டும். இதனை தொடர்ச்சியாக 2 வாரங்கள் செய்து வந்தால், ஸ்ட்ரெட்ச் குறிகளை தடுத்து, அதனை நீக்கவும் செய்யும்.
பாதாமில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. அதனால் பாதாமை அதிகம் சாப்பிடலாம் அல்லது ஸ்ட்ரெட்ச் குறிகள் உள்ள இடத்தில் பாதாம் எண்ணெயை தடவலாம். இது கொலாஜென் மற்றும் எலாஸ்டிக் பைபர்கள் உருவாகச் செய்யும். இந்த இரண்டு புரதமும், ஆரோக்கியமான சருமத்தை பெற உறுதுணையாக இருக்கும். குறிப்பாக இது கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான சிகிச்சையாக விளங்குகிறது. மேலும் தாய்க்கும், கருவிற்கும் சிறந்த ஊட்டச்சத்தாகவும் விளங்கும். முக்கியமாக மூளை வளர்ச்சிக்கு அத்தியாவசிய மூலமாக விளங்குகிறது.
சைக்கிள் ஓட்டுவது, படுத்து எழுந்திருப்பது போன்ற வயிறு சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், தசைகள் வலுவடைந்து உடல் எடையும் குறையும். அதனால் ஸ்ட்ரெட்ச் குறிகள் உண்டாவதும் தடுக்கப்படும். யோகா செய்யும் போது சில மூச்சு பயிற்சி அல்லது ப்ராணயாமத்தில் ஈடுபட்டாலும் கூட, சருமத்தின் நெகிழ்வு தன்மையை மேம்படுத்தி ஸ்ட்ரெட்ச் குறிகளை நீக்கலாம்.
ஆல்பா-ஹைட்ராக்ஸி அமில குடும்பத்தை சேர்ந்ததாகும் க்ளைகோலிக் அமிலம். இது சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்கும் சிறந்த எக்ஸ்போலியேட்டராகவும் விளங்குகிறது. கரும்பு மற்றும் பழுக்காத திராட்சையிலிருந்து எடுக்கப்படும் இந்த அமிலம், பாதிப்படைந்த சருமத்தின் மேல் பகுதியை நீக்கி விடும். அதனால் சருமத்தின் உட்புறம் உள்ள ஆரோக்கியமான அடுக்கு வெளிப்படும். இது கொலாஜென் பைபர்கள் உருவாகுவதிலும் உறுதுணையாக விளங்குகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. ஸ்ட்ரெட்ச் குறிகள் ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய, இந்த கொலாஜென் பைபர்கள் உதவுகிறது. அதனால் இதன் பயன்பாடு மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.

ஆயுர்வேதம் சொல்லும் உணவின் அளவு எவ்வளவு!



நாம் உண்ணும் உணவை இரண்டு வகையாக பிரிக்கலாம். எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவை ‘லகு’ என்றும், சிரமப்பட்டு உணவை உடைத்துக் கூழாக்கி நீண்ட நேரத்திற்குப் பிறகு ஜெரிக்கும் உணவு வகைகளை ‘குரு’ என்றும் இருவகைகள். அரிசி, கொள்ளு, பொரி, கசப்பு, துவர்ப்பு மிகுந்த பொருட்களை எளிதில் ஜீர்ணமாக்கி விடுகிறோம். மாப்பண்டங்கள், இனிப்பு வகைகள் அனைத்தும் மெதுவாக ஜீர்ணமாகின்றன. இது இயற்கையான நியதி என்றிருந்தாலும் உணவை சமைப்பதன் மூலம் ‘குரு’வான உணவை எளிதில் ஜெரிப்பதிலும், ‘லகுவான’ உணவை குருவாக்கவும் செய்து விட முடிகிறது. கோதுமை சப்பாத்தியை நெருப்பில் இட்டு பாகப் படுத்துவதும், அரிசியை பொங்கலாக்குவதும் அதற்கு உதாரணங்கள். உடற்பயிற்சியின் மூலமாக உடல் பலமும் அக்னி பலமும் நன்றாக அமைந்தவர்களுக்கு எவ்வித உணவையும் எளிதில் ஜீரணித்து விடுகின்றனர்.
உடல் பலமும் அதற்கேற்ப அக்னி பலமும் பருவநிலைகளால் மாறுபடுகின்றன. குளிர் காலங்களில் உடலும் அக்னிபலமும் அதிகரித்திருக்கும். மழைக்காலம், கோடைக்காலம் இவைகளில் குறைந்தும், இளவேனிற் காலம், இலையுதிர் காலம் போன்ற பருவங்களில் நடுத்தரமாகவும் இருக்கும்.கர்ப்பப்பையில் சினை முட்டையின் சேர்க்கை நிகழ்ந்ததும் குழந்தையின் வாத பித்த கப தோஷங்களின் சேர்க்கையின் அளவும், ஜீரண சக்தியின் பலமும் அந்த தோஷங்களாலும் தீர்மாணிக்கப்படுகின்றன. தாயாரின் பாலை மட்டுமே அருந்தி வளரும் குழந்தை பெரிதானதும் அறுசுவை உணவையும் ஜீர்ணிப்பதை காண்கிறோம்.குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் முடிய உள்ள வயது காரணமாகவும், வசிக்கும் இடம் காரணமாகவும், ஜீரண சக்தி வேறுபடுகிறது. கடற்கரை ஓரம், சதுப்பு நிலங்கள் போன்ற இடங்களில் சிறிதளவு உணவைக் கூட ஜீரணிக்க முடியாத சில உடல் நிலைகள், வரண்ட இடங்களில் வசிக்கும்போது எவ்வித உணவையும் ஜீரணிக்கும் தன்மையை பெறுகின்றன.
நமது புலன்களுக்குப் புலப்படாத இந்த அக்னியின் பலத்தை அவரவர்கள் தான் நன்கு உணர முடியும். சர்க்கரையில் உள்ள இனிப்பு, அனுபவ வாயிலாகவே அறிய முடியும். எனவே அவரவர் தன் உடல் நிலையைத் தானாகவே நன்கு அறிந்து கொண்டு அக்னி பலத்தைத் தீர்மாணித்து எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருள்களை திருப்தி ஏற்படும் வரையில் உண்ணலாம். அதிலும் அதிக திருப்தி ஏற்படும்வரை உட்கொள்ளுதல் கூடாது. தாமதித்து ஜீரணமாகும் உணவுப் பொருட்களை “மேலும் ஓர் பங்கு சாப்பிடலாம்” என்று தோன்றும் பொழுதே உண்பதை நிறுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவை நன்கு ஜீரணம் அடையும். அவரவர் ஜீரண சக்திக்குத் தகுந்தவாறு உண்ண வேண்டும் என்று கூறியதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. தன் ஜீரண சக்தியை அறிந்து தன் இரைப்பை கொள்ளும் அளவை நான்கு சமபாகங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். அவற்றுள் இரண்டு பாகங்களை அன்னம் போன்ற கனமான பொருள்களாலும், மற்றொரு பாகத்தை தண்ணிர் முதலிய திரவங்களாலும் நிரப்பி எஞ்சியுள்ள மற்றொரு பாகத்தை காலியாகவே விட்டுவிட வேண்டும். இந்த அளவு முறையை அநுபவ வாயிலாக அறிய வேண்டும். வேறு எந்த வழியும் பூரணமான வழியாகாது. அவ்வப்போது அவரவர் தீர்மாணிப்பதே சாலச் சிறந்தது.
இடைவெளியில்லாமல் வயிற்றின் முழு பகுதியையும் உணவால் நிரப்பியால் உணவு அசையக்கூடமுடியாமல் தேங்கி ஜீரணமாகாமல் நிற்கும். ஆகவேதான் நான்கில் ஒரு பகுதியை காலியாக விட வேண்டும் என்ற உபதேசத்தை ஆயுர்வேதம் நமக்களிக்கிறது. அதிக அளவில் கனமான பொருளை சாப்பிட்டால் உணவு நெகிழ்ச்சி ஏற்படாமல் மந்தித்து நிற்கும். அதை தளர்வு செய்ய தண்ணீரை உணவின் இடையில் சிறிய அளவில் பருக வேண்டும். திரவமான உணவை அதிக அளவில் ஏற்றால் அது எளிதில் ஜீரணமாகி மறபடியும் பசியை எடுக்கச் செய்யும். அடிக்கடி உண்பது ஆரோக்யத்திற்கு ஏற்றதல்ல. திரவ உணவிற்கு சத்தும் குறைவு என்பதால் உடல் மெலிந்து விடும். தண்ணீரை உணவிற்கு முன்பும் உணவிற்குப் பின்னர் குடிப்பதும் தவறாகும். உணவிற்கு முன் குடித்தால் வயறு நிரம்பி விடும். கனமான பொருளை சரியான விகிதத்தில் உண்ண முடியாது. ஜீரணமாகாது. உணவிற்குப் பின் தண்ணீர் குடித்தால் கபநோய்கள் ஏற்பட்டு உடல் பருமன், ஜலதோஷம் போன்றவை ஏற்படலாம். ஆகவே பசியை நன்குணர்ந்து உணவை நாம் உண்ண வேண்டும்.

கருப்பட்டி சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.



பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்
தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில்
சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.

தமிழ் மொழி



1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்

2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்

3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்

4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்

5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்

6) அன்னைத்தமிழ்:- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ்

7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (இசை மொழியின் கூறாவது ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)

9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)

10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.

11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)

12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்

13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)

14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்

15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் மாந்தமாந்த மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்

16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்

17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்

18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்

19) சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது

20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)

21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்

22) தனித்தமிழ்:- தன்னேரிலாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்

23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது

24) தாய்த்தமிழ்:- தமிழினத்தின் தாயாகவும் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் மூலமாகவும் விளங்கும் தமிழ்

25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்

26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது

27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்

28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்

29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)

30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்

31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது

32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது

33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது

34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது

35) மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)

36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்

37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)


38) வளர்தமிழ்:- காலந்தோறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ் 

47 வகை நீர்நிலைகள்


 

01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்

02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது

03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. ஆறு -(River) - பெருகி ஓடும் நதி

05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்

06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு

07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை

08. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது

09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்

10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்

11. கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு

12. கடல் -(Sea) சமுத்திரம்

13. கம்வாய்(கம்மாய்)-(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்

14. கலிங்கு -(Sluice with many Venturis)ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. கால் - (Channel) நீரோடும வழி

16. கால்வாய் -(Suppy channel to a tank )ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி

17. குட்டம் - (Large Pond) பெருங் குட்டை

18. குட்டை- (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை

19. குண்டம் -(Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை

20. குண்டு - (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. குமிழி - (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு

22. குமிழி ஊற்று - (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . குளம் -(Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. கூவம் - (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு

25 . கூவல் - (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம் 

26. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. கேணி--( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு

28. சிறை -(Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை

29. சுனை -(Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை

30. சேங்கை - (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்

31. தடம் -(Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்

32 . தளிக்குளம் -(tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. தாங்கல் - (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்

34. திருக்குளம் - (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்

35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்

36. தொடு கிணறு -(Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்

37. நடை கேணி - (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு

38. நீராவி -(Bigger tank with center Mantapam) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்

39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. பொங்கு கிணறு -(Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு

41. பொய்கை -(Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை

42. மடு -(Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்

43. மடை -(Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு

44. மதகு -(Sluice with many venturis) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது

45. மறு கால் -(Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்

46. வலயம் -(Round tank) வட்டமாய் அமைந்த குளம்


47. வாய்ககால் -(Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்

இலங்கை தமிழர் படுகொலைக்கு மத்திய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் – இல.கணேசன்



தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் ‘வீடு தோறும் நரேந்திரமோடி இல்லந்தோறும் தாமரை’ என்ற பிரசார தொடக்க விழா சென்னை மேடவாக்கத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் வேதசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
இந்த பிரசார யாத்திரையை பாரதீய ஜனதா மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் நரேந்திரமோடிக்கு ஆதரவாக கிராம யாத்திரை தொடங்கப்பட்டு உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 645 கிராம பஞ்சாயத்துகளில் இந்த யாத்திரை நடக்கிறது. இந்த யாத்திரையின் போது வீடு வீடாக சென்று அவர்களது மனநிலை, நரேந்திர மோடி பற்றிய தகவல்கள், கிராமத்தில் உள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்வோம்.
மேலும் குடும்பத்தில் உள்ள தலைவரின் செல்போன் எண்கள் வாங்கப்படும். அந்த செல்போன் எண்ணிற்கு நரேந்திரமோடி நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவார். இந்த பகுதியில் நான் 7 நாள் யாத்திரை செய்ய உள்ளேன்.
இலங்கை பிரச்சினை பற்றி சென்னையில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் 2 மணி நேரம் பேசினார். அப்போது இலங்கை பிரச்சினைக்கு பாரதீய ஜனதா கட்சி தான் காரணம் என்ற தவறான தகவல்களை தெரிவித்து உள்ளார். மத்தியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு ஆயுத உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் இந்தியா வழங்கும் ஆயுதம் இந்தியவம்சாவளிகளான தமிழர்களை கொல்ல பயன்படுத்தப்படும் என்பதால் ஆயுதங்களை வாஜ்பாய் வழங்க மறுத்தார்.
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கினால் அது எப்படி இந்தியாவிற்கு எதிராக திரும்புமோ, அதுபோல் இலங்கைக்கு ஆயுதம் வழங்கினால் தமிழர்களுக்கு எதிராக திரும்பும் என்பதால் வழங்கப்படவில்லை. மேலும் இலங்கை வீரர்களுக்கும் பயிற்சி அளிக்க நாங்கள் மறுத்துவிட்டோம். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்தால் இந்தியாவிற்கோ, இலங்கை தமிழர்களுக்கோ எந்தவித பயனும் கிடையாது. அது ராஜபக்சேவிற்கு தான் நன்மையாக இருக்கும் என்பதால் தமிழக பாரதீய ஜனதா கட்சி எதிர்த்தது.
ஆனால் தற்போது உள்ள மன்மோகன்சிங் அரசு, இலங்கைக்கு பெரும் அளவில் ஆயுதங்களை வழங்கி உள்ளது. இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளித்து உள்ளது. பணத்தை வாரி வழங்கி உள்ளது. இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு ராஜபக்சே முழு பொறுப்பு. இதற்கு இந்திய அரசு முழு தார்மீக பொறுப்பு ஏற்கவேண்டும். அதில் ப.சிதம்பரத்திற்கு 50 சதவீத பொறுப்பு உண்டு.
சென்னையில் 2 மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. மின்வெட்டுக்கு மத்திய அரசு தான் பொறுப்பு என தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது. கடந்த மே மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை மின்வெட்டு ஏற்படாமல் இருந்ததற்கு மத்திய அரசு தான் காரணம் என கூற முடியுமா? குறை கூறுவதை விட்டுவிட்டு மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்குவதாக வாக்குறுதி தரப்பட்டது. மக்களுக்கு தந்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். டீசல் விலை உயர்வு கண்டிக்கிறோம். இதனால் விலைவாசி உயர்வு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் தொடரும் கனமழை





வங்க கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தது. அதன்படி சென்னையில் கனமழை பெய்தது.
காலையில் கனமழை பெய்தததை அடுத்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், சென்ட்ரல் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

ஏற்காடு இடைத்தேர்தலுக்காக குவிக்கப்பட்ட ரிசர்வ் போலீஸ்!



ஏற்காடு தொகுதியில் நாளை (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் ஏற்காடு தொகுதி பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில்பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் சேலம் மாவட்ட போலீசார், வெளிமாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தொகுதி முழுவதும் பதற்றமான இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏற்காடு இடைத்தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையிலும், வாக்காளர்கள் பணம் வாங்கினால் ஓராண்டு சிறைத்தண்டனை என்பதை பொதுமக்களிடம் விளக்கி ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்யப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் 2 கூடுதல் சூப்பிரண்டுகள், 9 துணை சூப்பிரண்டுகள் மற்றும் 35 சிறப்பு படைகளுடன் வாழப்பாடி, பேளூர், சிங்கிபுரம், கூட்டாத்துப்பட்டி, அனுப்பூர் ஆகிய ஊர்களில் மொத்தம் 128 கிராமங்களில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
மேலும் ஏற்காட்டில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாரால் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை வாழப்பாடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் மத்திய ரிசர்வ் படை போலீசார் மற்றும் சேலம் மாநகர போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி கொடி அணிவகுப்பு ஒத்திகை நடத்தினார்கள்.
வாழப்பாடி பருத்தி மண்டி பகுதியில் போலீசாரின் அணிவகுப்பு தொடங்கி, வாழப்பாடி பஸ் நிலையம் வழியாக சென்று பேளூர் பிரிவு ரோட்டில் முடிந்தது. இந்த அணிவகுப்பில் சுமார் 500 போலீசார் பங்கேற்றனர்.

ஜெயலலிதாவுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பிய அதிரடி நோட்டீஸ்!



தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் என்று, கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேர்தல் அறிவிப்பு தேதி வெளியான தினத்தில் இருந்து, சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிட்டது.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையத்துக்கு ஒரு புகார் வந்துள்ளது. அந்த புகாரின்படி, கடந்த 28ம் தேதி அவரது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக ஏற்காடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்யும்போது புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்புகளை முதல்வர் அறிவித்திருக்கிறார். இதையடுத்து, தேர்தல் ஆணையம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகார் தொடர்பாக ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்பதால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு செவ்வாய்க் கிழமை (இன்று) மாலை 5 மணிக்குள் முதல்வர் பதில் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ஏற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் சரோஜாவுக்கு வாக்களித்து, அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று வாக்காளர்களை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: விலையில்லா அரிசி; விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி; விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் ஆடுகள் திட்டம்; உழவர் பாதுகாப்புத் திட்டம்; மருத்துவ காப்பீட்டு திட்டம்; தாலிக்கு தங்கம் திட்டம்; கட்டணமில்லா கல்வி; விலையில்லா புத்தகங்கள்; சீருடைகள்; காலணிகள்; பென்சில்கள்; பெட்டிகள்; வரைபட புத்தகங்கள்; மடிக் கணினிகள்; சைக்கிள்கள்; பசுமை வீடுகள் திட்டம்; அம்மா குடிநீர் என மக்கள் நலன் காக்கும் பல திட்டங்கள் உங்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனது தலைமையிலான அதிமுக அரசின் சாதனைகளை சீர்தூக்கி பார்த்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தை சீனாவுக்கு தாரை வார்க்க முடியாது!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருப்பதாக குற்றம் சுமத்துவதோடு, அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்றே அழைக்கிறது.
அங்கு இந்திய தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது எதிர்ப்பு தெரிவிக்கிறது.இப்பிரச்னை தொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அருணாச்சல பிரதேசத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இடாநகரில் உள்ள சட்டசபையில் எம்எல்ஏக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் முக்கியமான பகுதி. இந்தியாவின் மற்ற பகுதிகளோடு இம்மாநிலத்தை இணைக்கும் வகையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாநிலத்தின் எல்லை பகுதிகள் 3 நாடுகளோடு தொடர்பு கொண்டிருப்பதால் அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமானது என்றார்.
இந்நிலையில், எல்லை பிரச்னையை தீவிரமாக்கும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் குயின் கேங் கூறுகையில், ‘‘இருநாடுகள் இடையிலான உறவை பாதுகாப்பதில் சீனாவுடன் இணைந்து இந்தியா செயல்படும் என நாங்கள் நம்புகிறோம். எல்லை பிரச்னையை சிக்கலாக்கும் வகையில் இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால்தான் எல்லைப் பகுதியில் அமைதியை காக்க முடியும்’’ என்றார்.

மக்கள் விரோத கொள்கையினால் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி – பாரதீய ஜனதா


புதுடெல்லி மாநில சட்டசபைக்கு நாளை தேர்தல் நடக்கிறது. டெல்லியில் 15 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஷீலா தீட்சித் தலைமையில் நடந்து வருகிறது. இந்நிலையில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்க தீவிரமாக உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித் அரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டது. விலைவாசி உயர்வு, லஞ்சம், ஊழல் மற்றும் மக்கள் விரோத கொள்கைகள் ஆகியவை பற்றி அதில் விளக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத கொள்கையினால் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி புதுடெல்லியில் ஏற்பட்டுள்ளது என்று பாரதீய ஜனதா கூறியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியினை பாரதீய ஜனதா நிராகரித்துவிட்டது. புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மேல் சபை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, டெல்லியில் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி ஏற்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அமையும் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. எப்போது வெற்றி பெறும் முயற்சியை நிறுத்தியதோ, இது அந்த கட்சிக்கு உண்மையான தோல்வி என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


10 முறை மோடி பிரதமர் ஆனாலும் 370 நீக்க முடியாது

ஜம்முவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ‘‘ஜம்மு–காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ள அரசியல் சட்டத்தின் பிரிவு 370–ன் பல்வேறு அம்சங்கள் குறித்து எங்கள் கட்சி விவாதிக்க விரும்புகிறது. இதில், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பெண்களைப் போன்று காஷ்மீர் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படவில்லை’’ என சுட்டிக்காட்டினார். இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா தலைவர்கள் தங்களதுக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா, பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி 10 முறை பிரதமர் ஆனாலும், அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்ய முடியாது என்று கூறியுள்ளார். நீங்கள் விவாதிப்பது குறித்து பேசுகிறிர்கள், பாரதீய ஜனதா எந்த விவாதத்திலும் ஈடுபடாது என்று கூறியுள்ளார்.
முன்னாள் சமாஜ்வாடி கட்சி தலைவர் அமர் சிங் வீட்டில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தானை சேர்ந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் பேசிய கூட்டத்தில் கலந்து கொண்ட பரூக் அப்துல்லா, இரு நாடுகளிலும் வளர்ச்சி ஏற்பட ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறினார். பாகிஸ்தான் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது. நீங்கள்(பாகிஸ்தான்) காஷ்மீரை வெற்றி கொள்ள முடியாது. இதனை எனது இரத்ததாலும் எழுத முடியும் என்று கூறினார். காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டு கட்சி தலைவர் கூறுகையில், எனது அம்மா வழி தாத்தாவின் சமாதி லாகூரில் உள்ளது. ஆனால் நான் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறினார்.
பாகிஸ்தான், இந்தியா ஜீலம், செனாப் மற்றும் இந்துஸ் ஆற்றின் திசைய திருப்பலாம் என பயப்படுகிறது. இந்தியா இதனை செய்யாது என்று கூறியுள்ளார்.

சீனாவுடன் கூட்டணி போடும் இந்தியா இது விண்வெளிக்காக


India Mars mission

விண்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம் என சீனா தெரிவித்துள்ளது. சந்திரனில் கால்பதித்து ஆய்வு நடத்த சீனா தயாரித்துள்ள முதல் ஆளில்லா விண்கலமான சாங் இ-3 நேற்று அதிகாலை 56.4 மீட்டர் உயரமுள்ள லாங் மார்ச்- 3பி ராக்கெட்டின் மூலம் ஷிசாங் விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் பூமியிலிருந்து விலகி செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது 300 நாள் பயணத்தைத் துவங்கியதற்கு மறுநாள் சீனாவின் சாங் இ-3 விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது.இந்த விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அடுத்து, விண்வெளி தொடர்பான விவகாரங்களில் மற்ற நாடுகளுடன் குறிப்பாக அண்டை நாடான இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக சீன விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திர விண்கலத் திட்டத்தின் தலைமைத் துணை கமாண்டர் லீ பென்ஜாங் இது குறித்து கூறுகையில், சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி போட்டி நோக்கத்தோடு நாங்கள் செயல்படவி்ல்லை. இது தொடர்பாக மற்ற நாடுகளின் ஒத்துழைப்பை ஏற்றுக்கொள்ள விரும்புவதாகவும். விண்வெளி தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்’ அதனை மேம்படுத்த வேண்டும் என்றார்.
சாங் இ-3 விண்கலம், பூமி-சந்திரனின் சுற்றுப்பாதையில் திட்டமிட்டபடி உள்ளளே சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விண்கலம், டிசம்பர் மாத மத்தியில் சந்திரனில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளி துறையில் இந்தியாவின் முத்திரை:
இந்தியாவின் செவ்வாய் ஆராய்ச்சியை சீனா உள்ளிட்ட நாடுகள் கூர்மையாக கவனித்து வந்தன. இந்நிலையில், மங்கள்யானின் இந்த வெற்றி, விண்வெளி துறையின் இந்தியாவின் முத்திரையை அழுத்தமாக பதித்துள்ளது.நவம்பர், 5ம் தேதி, பி.எஸ்.எல்.வி., சி – 25 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த, “மங்கள்யான்’ செயற்கைக்கோளின் நீள்வட்ட பாதையை, பல கட்டங்களாக அதிகரிக்கும் பணி, பெங்களூருவில் உள்ள, “பீன்யா’ கட்டுப்பாட்டு மையத்தில் நடந்தது. கடைசியாக, நவ., 16ம் தேதி, பூமியில் இருந்து, 1,92,874 கி.மீ., உயரத்தில், ‘மங்கள்யான்’ செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது.
செவ்வாய் நோக்கி அனுப்பும் பணி துவங்கி வெற்றிகரமாக, பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகம் நோக்கி தன், 68 கோடி கி.மீ., பயணத்தை துவக்கியது. “மங்கள்யான்’ செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள, சிறிய வகை ராக்கெட்கள் இயக்கப்பட்டு, நொடிக்கு 647.96 மைல் வேகத்தில், செவ்வாய் கிரகத்தை நோக்கி, “மங்கள்யான்’ பயணிக்கும். இந்த வேகத்தில் சென்றால் தான், பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து, விடுபட முடியும்.
இதே வேகத்தில், விண்வெளியில் பயணித்து, 2014, செப்., 24ம் தேதி, செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை, “மங்கள்யான்’ செயற்கைக்கோள் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக, அமெரிக்காவும், முன்னாள் சோவியத் யூனியனும் தான் சந்திரனில் தரையிறங்கும் விண்கலத்தை அனுப்பியுள்ளன. தற்போது அதனுடன் சீனாவும் இணைந்துள்ளது.மங்கள்யான் விண்கலம் வெற்றியால் சீனா, இந்தியாவோடு இணைய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனுமதிக்காத பாடத்தில் மாணவர் சேர்க்கை, கல்லூரிக்கு ரூ.2 லட்சம் அபராதம்


tamizl-news-tamilagam002145

மதுரை: பல்கலைக்கழகம் அனுமதி வழங்காத பாடப்பிரிவில் மாணவர்களை சேர்த்த கல்லூரிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அபராத தொகையை ஆசிரமத்திற்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நெல்லை, கள்ளிகுளம் தட்சிணமாற நாடார் சங்க கல்லூரியின் மாணவர்கள் நியூட்டன், அறிவுசுந்தரி, அருள்செல்வராணி உட்பட 9 பேர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: கல்லூரியில் எம்காம் சிஏ படிப்பில் சேர்ந்தோம். எங்களுக்கு முதல் பருவத்தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கவில்லை. தேர்வு எழுத அனுமதி கிடைப்பதில் சந்தேகம் ஏற்பட்டது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கேட்டபோது, ‘தட்சணமாற நாடார் கல்லூரியில் எம்காம் சிஏ படிப்புக்கு பல்கலைக்கழகம் அனுமதி வழங்கவில்லைÕ என தெரிவித்தனர்.
கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘விரைவில் பல்கலைக்கழக அனுமதி பெற்றுவிடுவோம் என்றனர். பல்கலைக்கழக அனுமதி கிடைக்காததால் நாங்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, பல்கலைக்கழகம் அனுமதி அளிக்காத பாடப்பிரிவில் மாணவர்களை சேர்த்ததால், ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்ய கல்லூரி நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி கல்லூரி நிர்வாகம் ஐகோர்ட் கிளை பதிவாளரிடம் ரூ.9 லட்சத்தை, டெபாசிட் செய்தது.
நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: பல்கலைக்கழகம் அனுமதி வழங்காத பாடப்பிரிவில் மாணவர்களை சேர்த்தது கடுமையான குற்றம். இதற்காக கல்லூரிக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் பல்கலைக்கழகம் அனுமதி வழங்காத பாடப்பிரிவில் எந்த கல்லூரியும் மாணவர்களை சேர்க்கக்கூடாது என்பதற்காக அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு மற்ற கல்லூரிகளுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும். அதற்காக கல்லூரிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. கல்லூரி ஏற்கனவே ரூ.9 லட்சம் டெபாசிட் செய்துள்ளது. அதில் ரூ.2 லட்சம் போக, மீத தொகையை கல்லூரிக்கு திரும்ப வழங்க வேண்டும்.
எம்காம் சிஏ படிப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களின் நலன் கருதி, இப்படிப்புக்கு பல்கலைக்கழகம் தற்காலிக அனுமதி வழங்கவேண்டும். நிரந்தர அனுமதி கேட்டு கல்லூரி நிர்வாகம் அளித்துள்ள மனுவை பல்கலைக்கழகம் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வுக்காக சிறப்பு தேர்வு நடத்தவேண்டும். அபராதத் தொகை ரூ.2 லட்சத்தை, நெல்லை காந்திமதியம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் சுவாமி நெல்லையப்பர் அன்பு ஆசிரமத்திற்கு வழங்கவேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் தான் பூசை செய்யப்படுதல் வேண்டும் – ராஜ்குமார் பழனிச்சாமி

தமிழர் மதத்தை நாம் அடையாளப்படுத்துவது காலத்தின் கட்டாயம். தமிழர்களின் அடையாளம் தமிழர்களே அன்றி இந்து என்பது அல்ல. இந்து என்பது நம்மேல் திணிக்கப்பட்ட அடையாளம் . பண்பாட்டு, வழிபாட்டு முறையில் நாம் தமிழர்களே ! தமிழே உலகின் மூத்த மொழியெனில் தமிழர் மதமே உலகின் மூத்த சமயமாகும்.
தமிழர் மதத்தின் நோக்கம் வருமாறு.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் தான் பூசை செய்யப்படுதல் வேண்டும்.
தமிழர் கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும். அனைவரும் ஆலயத்திற்குள் நுழையலாம். வழிபாடு செய்யலாம்.
கருவறைக்குள் தினசரி வழிபாடு செய்யும் நபர்கள் உயர்ந்த அர்ப்பணிப்புடன், பக்தியுடன், தமிழர் ஆன்மீக நூல்கள் செப்பும் நெறிமுறைகளுடன் செயல்பட வேண்டும். எனினும் எவர் வேண்டுமானாலும் கருவறைக்குள் புகுந்து இறைவனை தொட்டு வணங்க முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
தமிழர் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் தமிழ் மொழியே பயன்பாட்டு மொழியாக இருக்க வேண்டும் .
தமிழ் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் வைத்தல் வேண்டும்.
கோவில்களில் நடக்கும் வழிபாடுகள், குடமுழுக்கு அனைத்தும் தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும்.
தமிழர்களின் வழிபாட்டு, பண்பாட்டு, மொழி உரிமைகள் தமிழர் கோவில்களின் பின்பற்றப்பட வேண்டும்.
ஆரிய வேத நூல்கள் தமிழர்களுக்கு அடிப்படை இல்லாத காரணத்தால் தமிழ் நூல்களே தமிழர் மதத்திற்கு அடிப்படையாகும். அதே போல் ஆரியக் கட்டுக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட பண்டிகைகள் தமிழர் மதத்தினர் கொண்டாட வேண்டிய அவசியமும் இல்லை.
தமிழர்கள் கட்டிய கோவில்கள் அனைத்தும் தமிழர் வசமே ஒப்படைக்கப்பட வேண்டும்.
திருமணங்கள், புதுமனை புகுவிழா, வாழ்நாள் விழா , பிறந்த நாள் விழா என அனைத்தும் தமிழ் நூல்களின் அடிப்படையில் தான் அமைய வேண்டும்.
ஆரிய இந்து மதம் சார்ந்த சமஸ்க்ரித புராணங்கள் , கட்டுக் கதைகள் எவையும் தமிழர்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. இவற்றை தமிழர்கள் நம்ப வேண்டிய அவசியமும் இல்லை.
தமிழர்கள் தங்களுக்குள் எவ்வித சாதி , மத பேதங்கள் பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் அன்பாக பழகுதல் வேண்டும்.
சாதிய ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமத்துவமான வாழ்வியல் நெறியை தமிழர்கள் பின்பற்றுதல் வேண்டும்.
வருணம், ஆசிரமம் ஆகிய உலகியல் பேதங்களை தமிழர் மதம் முற்றிலும் புறக்கணிக்கிறது.
சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஒளவை சொல்லை தமிழர்கள் கடைப்பிடித்தல் வேண்டும்.
வழிபாடு, ஓகம், தியானம், மன ஒழுங்கு, உயிர் ஒழுங்கு போன்ற கலைகள் யாவும் தமிழர் நூல்கள் , சித்தர் நூல்கள் அடிப்படையில் தானே அமையப்பெற வேண்டும்.
தமிழர்களின் பண்ணிசை குழுக்கள் இசைமாலை தொடுத்து இறை வழிபாட்டில் ஈடுபடுதல் வேண்டும். திருமுறை ஓதுவார்களே தமிழில் வழிபாடு செய்தல் வேண்டும்.
அவரவர் வழிபாட்டு உரிமைகள் அவரவருக்கு உரியது. அது மூட நம்பிக்கை, பண்டைய நம்பிக்கை என எதுவானாலும் அது மற்றவருக்கு, சமூகத்திற்கு துன்பம் , இடையூறு தராத வகையில் இருத்தல் வேண்டும்.
தமிழரின் தொன்மையான ஓகக் கலை, வர்மக்கலை, ரசவாதம், மருத்துவம், சித்தர்களின் உயிர் வளக்கலை அனைத்தையும் பேணிப் பாதுகாப்பது தமிழர் மதத்தின் கடமையாகும்.
தமிழர் அனைவருக்கும் கோவில் பொதுவானதே . இதில் சேரித் தமிழர்கள் , நகர்புற தமிழர்கள் என்ற எந்த வேறுபாடுகளும் இல்லை. அனைத்து தமிழர்களுக்கும் வழிபாட்டு உரிமை சமமானதாக இருத்தல் வேண்டும் .
தமிழர் மதத்தில் இணைய விரும்பும் தோழர்கள் இந்த இணைப்பில் சென்று விருப்பம் தெரிவிக்கவும்.