26.11.13

நட்புக்கு கைகொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்!



ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமாரின் குரலாகும். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மாமா என்பதால் சிறுவயதிலிருந்தே இசையோடு உறவாடி வந்த பிரகாஷ்குமார், வெயில் படத்தில் இசையமைப்பாளரானார்.
மதராசப்பட்டினம், பரதேசி, அன்னக்கொடி, தலைவா என பல முன்னணி நடிகர்கள், டைரக்டர்களின் படங்களுக்கு இசையமைத்து இப்போது இளவட்ட இசையமைப்பாளர்களில் முன்னணி வகித்து வருகிறார். இசைத்துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதளவில் கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ், தற்போது மதயானைக்கூட்டம் என்ற படத்தை தயாரித்திருப்பவர், பென்சில் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.
ஒரு இசையமைப்பாளருக்குள் இத்தனை முகங்களா? என்று அவரைக்கேட்டால், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு விருப்பமாக இருந்ததில்லை. தற்போது பென்சில் படத்தை இயக்கியிருக்கும் மணி நாகராஜின் விளம்பர படங்களுக்கு ஆரம்ப காலத்தில் இசையமைத்திருக்கிறேன்.
ஆனால் அப்போதிலிருந்தே படம் இயக்குவதற்கான முயற்சிகளை ஈடுபட்டிருந்தார் அவர். ஆனால், அவர் இயக்கும் ஒவ்வொரு படங்களும் ஏதாவது பிரச்னையில் கிடப்பில் போடப்பட்டு வந்தது. இருப்பினும் ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என்று தொடர்ந்து அவர் கடுமையாக போராடிக்கொண்டிருந்தார்.
நீண்டகால நண்பர் என்பதால், அவரது போராட்டத்தைப்பார்த்துதான், அவரை இயக்குனராக்க வேண்டும் என்பதற்காகவே பென்சில் படத்தில் நடிக்க சம்மதித்தேன்.
இப்போது அவர் இயக்குனராகி விட்டதில் அவரைப்போலவே எனக்கும் ரொம்ப சந்தோசமாக உள்ளது என்று சொல்லும் ஜி.வி.பிரகாஷ், இப்போது படம் நன்றாக வந்திருக்கிறதைப்பார்க்கையில், ஒரு திறமையான கலைஞனுக்கு கைகொடுத்த திருப்தி எனக்கு கிடைத்திருக்கிறது என்கிறார்.

No comments:

Post a Comment