4.12.13

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் தான் பூசை செய்யப்படுதல் வேண்டும் – ராஜ்குமார் பழனிச்சாமி

தமிழர் மதத்தை நாம் அடையாளப்படுத்துவது காலத்தின் கட்டாயம். தமிழர்களின் அடையாளம் தமிழர்களே அன்றி இந்து என்பது அல்ல. இந்து என்பது நம்மேல் திணிக்கப்பட்ட அடையாளம் . பண்பாட்டு, வழிபாட்டு முறையில் நாம் தமிழர்களே ! தமிழே உலகின் மூத்த மொழியெனில் தமிழர் மதமே உலகின் மூத்த சமயமாகும்.
தமிழர் மதத்தின் நோக்கம் வருமாறு.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் தான் பூசை செய்யப்படுதல் வேண்டும்.
தமிழர் கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும். அனைவரும் ஆலயத்திற்குள் நுழையலாம். வழிபாடு செய்யலாம்.
கருவறைக்குள் தினசரி வழிபாடு செய்யும் நபர்கள் உயர்ந்த அர்ப்பணிப்புடன், பக்தியுடன், தமிழர் ஆன்மீக நூல்கள் செப்பும் நெறிமுறைகளுடன் செயல்பட வேண்டும். எனினும் எவர் வேண்டுமானாலும் கருவறைக்குள் புகுந்து இறைவனை தொட்டு வணங்க முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
தமிழர் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் தமிழ் மொழியே பயன்பாட்டு மொழியாக இருக்க வேண்டும் .
தமிழ் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் வைத்தல் வேண்டும்.
கோவில்களில் நடக்கும் வழிபாடுகள், குடமுழுக்கு அனைத்தும் தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும்.
தமிழர்களின் வழிபாட்டு, பண்பாட்டு, மொழி உரிமைகள் தமிழர் கோவில்களின் பின்பற்றப்பட வேண்டும்.
ஆரிய வேத நூல்கள் தமிழர்களுக்கு அடிப்படை இல்லாத காரணத்தால் தமிழ் நூல்களே தமிழர் மதத்திற்கு அடிப்படையாகும். அதே போல் ஆரியக் கட்டுக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட பண்டிகைகள் தமிழர் மதத்தினர் கொண்டாட வேண்டிய அவசியமும் இல்லை.
தமிழர்கள் கட்டிய கோவில்கள் அனைத்தும் தமிழர் வசமே ஒப்படைக்கப்பட வேண்டும்.
திருமணங்கள், புதுமனை புகுவிழா, வாழ்நாள் விழா , பிறந்த நாள் விழா என அனைத்தும் தமிழ் நூல்களின் அடிப்படையில் தான் அமைய வேண்டும்.
ஆரிய இந்து மதம் சார்ந்த சமஸ்க்ரித புராணங்கள் , கட்டுக் கதைகள் எவையும் தமிழர்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. இவற்றை தமிழர்கள் நம்ப வேண்டிய அவசியமும் இல்லை.
தமிழர்கள் தங்களுக்குள் எவ்வித சாதி , மத பேதங்கள் பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் அன்பாக பழகுதல் வேண்டும்.
சாதிய ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமத்துவமான வாழ்வியல் நெறியை தமிழர்கள் பின்பற்றுதல் வேண்டும்.
வருணம், ஆசிரமம் ஆகிய உலகியல் பேதங்களை தமிழர் மதம் முற்றிலும் புறக்கணிக்கிறது.
சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஒளவை சொல்லை தமிழர்கள் கடைப்பிடித்தல் வேண்டும்.
வழிபாடு, ஓகம், தியானம், மன ஒழுங்கு, உயிர் ஒழுங்கு போன்ற கலைகள் யாவும் தமிழர் நூல்கள் , சித்தர் நூல்கள் அடிப்படையில் தானே அமையப்பெற வேண்டும்.
தமிழர்களின் பண்ணிசை குழுக்கள் இசைமாலை தொடுத்து இறை வழிபாட்டில் ஈடுபடுதல் வேண்டும். திருமுறை ஓதுவார்களே தமிழில் வழிபாடு செய்தல் வேண்டும்.
அவரவர் வழிபாட்டு உரிமைகள் அவரவருக்கு உரியது. அது மூட நம்பிக்கை, பண்டைய நம்பிக்கை என எதுவானாலும் அது மற்றவருக்கு, சமூகத்திற்கு துன்பம் , இடையூறு தராத வகையில் இருத்தல் வேண்டும்.
தமிழரின் தொன்மையான ஓகக் கலை, வர்மக்கலை, ரசவாதம், மருத்துவம், சித்தர்களின் உயிர் வளக்கலை அனைத்தையும் பேணிப் பாதுகாப்பது தமிழர் மதத்தின் கடமையாகும்.
தமிழர் அனைவருக்கும் கோவில் பொதுவானதே . இதில் சேரித் தமிழர்கள் , நகர்புற தமிழர்கள் என்ற எந்த வேறுபாடுகளும் இல்லை. அனைத்து தமிழர்களுக்கும் வழிபாட்டு உரிமை சமமானதாக இருத்தல் வேண்டும் .
தமிழர் மதத்தில் இணைய விரும்பும் தோழர்கள் இந்த இணைப்பில் சென்று விருப்பம் தெரிவிக்கவும்.

No comments:

Post a Comment