22.11.13

கரகாட்டக்கதையை படமாக்குகிறாராம் பாலா!



தனக்கும் மற்ற இயக்குனர்களுக்கும் வித்தியாசம் வேண்டும் என்பதற்காக தனது படங்களில் நடிக்கும் நடிகர்களை வருடக்கணக்கில் குளிக்காமல் திரியும் அகோரிகளைப்போன்று மாற்றி நடிக்க வைத்து வருபவர் பாலா.
உதாரணத்துக்கு சேது, பிதாமகன், அவன் இவன், பரதேசி போன்ற படங்களை பட்டியலிடலாம். இதில், அவன் இவன் படத்தை கதையே இல்லை என்று சொல்லி எடுத்த பாலா, பரதேசி படத்தை தேயிலைத் தோட்டத்தில் சிக்கிய அடிமைகளின் வாழ்க்கை கதையை சொல்லி கலங்க வைத்திருந்தார்.
அதையடுத்து, விக்ரம், அதர்வா, சசிகுமார் இவர்களில் யாராவது இருவரைக்கொண்டு அடுத்த படத்தை பாலா இயக்க இருக்கிறார் என்று கடந்த சில மாதங்களாகவே செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. ஆனால், இப்போது சசிகுமாரே பாலாவின் அடுத்த பட ஹீரோ என்கிறார்கள்.
எந்த மாதிரியான கதை என்று விசாரித்தபோது, மதுரைப்பகுதியில் வாழும் கரகாட்டக்காரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிறது என்கிறார்கள். கேலியும் கிண்டலுமாக செல்லும் கரகாட்டக்காரர்களின் கண்ணீரை சொல்லும் வகையில் இந்த கதை உருவாகியிருக்கிறதாம்.
ஏற்கனவே கரகாட்டக்காரன் படத்தில் பசுநேசன் ராமராஜன், தலையில் கிரகமும், காலில் சலங்கையும் கட்டிக்கொண்டு கனகாவுடன் மாங்குயிலே பூங்குயிலே என்று ஆடியது போன்று சசிகுமாரும் கனகச்சிதமாக கரகாட்டம் ஆட தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம். அவருடன் ஜோடி போட்டு ஆடப்போகும் கனகாதான் யார் என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment