23.11.13

வசூல் புலிகளின் பொங்கல் பாய்ச்சல்



தமிழ்த் திரையுலகின் முக்கிய வியாபாரக் கேந்திரங்கள் திரையரங்குகள். பாக்ஸ் ஆபீஸ் என்று வர்ணிக்கப்படும் திரையரங்குகளின் வசூல் நிலவரம்தான் இன்றைய வணிகத் தமிழ்சினிமாவின் ‘பிராண்ட் ஈக்குவிட்டியாக’ வலம் வரும் மாஸ் ஹீரோக்களின் செல்வாக்கை நிலைநிறுத்தும் சக்தி. ஒரு ஹீரோவின் வசூல் உயர உயரத்தான், அவரது ஊதியமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்படி வசூல் புலிகளாக இருக்கும் மாஸ் ஹீரோக்களின் பாய்ச்சல் வரும் ஜனவரி முதல் பொங்கல் ஜல்லிக்கட்டாகத் தொடங்க இருக்கிறது!
நடப்பு 2013 ஆம் ஆண்டைவிட எதிர்வரும், 2014 ஆண்டு கண்டிப்பாக மாஸ் ஹீரோக்களின் ஆண்டாக இருக்கப்போவது உறுதி. மேலும் இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், சினிமா ரசிகர்கள் என அனைவருக்கும் முக்கிய ஆண்டாக இருக்கப் போகிறது என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்! அப்படியென்ன ஸ்பெஷல்? ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என அனைத்து நடிகர்களின் படங்களும் வெளியாக இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், முன்னணி நடிகர்கள் அனைவருமே, முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார்கள்.
2014ன் தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகப் பாக்ஸ் ஆபிஸில் ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் படங்களின் மோதவிருக்கின்றன. பொங்கல் ரேஸில் முதலில் குதித்தது அஜித்தின் 'வீரம்'. அதனைத் தொடர்ந்து இணைந்தது விஜய்யின் 'ஜில்லா'. ரஜினியின் 'கோச்சடையான்', ரஜினியின் பிறந்த நாளான 12-12-2013ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். ரஜினி படம் வருகையால் அஜித், விஜய் படங்கள் தள்ளி வைக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின.
ஆனால் நடந்ததோ அதற்கு எதிர்மறையாக இருந்தது. 'கோச்சடையான்' பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்த தினத்தன்று மாலையே, 'வீரம்' படத்தின் தயாரிப்பாளர் “எங்களது படம் கண்டிப்பாகப் பொங்கலுக்கு வெளியாகும்” என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 'ஜில்லா' தயாரிப்பாளரும் “எங்களது படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக 'ஜில்லா' பொங்கல் விருந்து” என்று கூறவே விநியோகஸ்தர்கள் மத்தியில் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்ற பேச்சு எழுந்தது. 'ஆரம்பம்' படத்தின் வசூல் மழையால், விநியோகஸ்தர்கள் தற்போது உரிமைக்கு மோதிக் கொண்டிருப்பது அஜித்தின் 'வீரம்' படத்திற்குத் தான். அதற்குப் பிறகு விஜய்யின் 'ஜில்லா'. 'கோச்சடையான்' படத்திற்கு இதுவரை எந்த ஒரு விநியோகஸ்தரும் வாய்திறக்கவில்லை. இன்னும் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்படுத்தவில்லை என்பது முக்கியான காரணமாகும்.
பொங்கல் ரேஸில் 'ஜில்லா' படத்தின் விநியோக உரிமையை ஆர்.பி.செளத்ரி கொடுத்து முடித்துவிட்டார். 'வீரம்' படத்தினைப் பொறுத்தவரை யாருக்கு உரிமை என்று கடுமையான போட்டி நிலவி வருகிறது. 'கோச்சடையான்' பொறுத்தவரை ரஜினி பிறந்த நாளான 12-12-2013 அன்று நடைபெற இருக்கும் இசை வெளியீடு, டிரெய்லர் ஆகியவற்றைப் பொருத்தே படத்தின் விநியோக உரிமை போட்டி இருக்கும் என்று பேச்சுகள் நிலவுகின்றன.
ரஜினி, அஜித், விஜய் என மூன்று பேரின் படங்களுமே வெளியானால், விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் சரியான லாபம் இருக்காது என்பதால், ஏதாவது ஒரு படத்தினைத் தள்ளி வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஆனால் யாருக்கு யார் விட்டுக் கொடுக்கிறார் என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும். இப்படங்களைத் தொடர்ந்து கமலின் 'விஸ்வரூபம் 2', சிம்புவின் 'வாலு' ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் - கெளதம் மேனன், விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யா - லிங்குசாமி, விக்ரம் - ஷங்கர் இணைப்பில் 'ஐ', சிம்பு - கெளதம் மேனன், தனுஷ் - கே.வி.ஆனந் இணையும் 'அநேகன்', வசந்தபாலன் இயக்கத்தில் 'காவியத் தலைவன்', பாலா - சசிகுமார் இணையும் படம், ஆர்யா - விஜய் சேதுபதி -ஜனநாதன் இணையும் 'புறம்போக்கு', ஜெயம் ரவி - சமுத்திரக்கனி இணைப்பில் 'நிமிர்ந்து நில்' உள்ளிட்ட படங்கள் 2014ல் வெளியாக இருக்கின்றன.
மேலே குறிப்பிட்டுள்ள படங்களைப் பார்த்தீர்கள் என்றால், அனைத்து நடிகர்களுமே முன்னணி இயக்குநர்கள் படங்களில் நடித்து வருகிறார்கள். இதனால் பாக்ஸ் ஆபிஸில், இப்படங்களுக்கு மிகப்பெரியளவில் ஒப்பனிங் இருக்கும். படமும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றால், பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை இருக்கும். 2014ல் இது போன்று, முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் இணைந்து பணியாற்றி வருவதால் விநியோகஸ்தர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. காரணம், அவர்களுக்கு எந்தப் படத்தினை வாங்கினாலும் கண்டிப்பாகக் கல்லா கட்டிவிடலாம் என்ற நம்பிக்கை கொடுத்திருக்கிறது. விநியோகஸ்தர்கள் தரப்பில் வைக்கப்படும் கோரிக்கை ஒன்று தான். அந்தக் கோரிக்கை, அனைத்துப் படங்களுமே போதிய இடைவெளி விட்டு வந்தால் நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும்,எங்களுக்கும் நல்லது என்பதுதான்.
டி.வி நிறுவனங்களுக்கு மத்தியிலும், எந்தப் படத்தின் உரிமை நமக்கு என்பதிலும் போட்டி நிலவி வருகிறது. தங்களது நிறுவனத்தின் விளம்பர வருவாய் குறைந்துள்ளதால், சன் டி.வி நிறுவனம் முக்கியப் படங்கள் அனைத்தையும் வாங்கி விளம்பர வருவாயைப் பெருக்க வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியிருக்கிறது. அஜித்தின் 'வீரம்', விஜய்யின் 'ஜில்லா', சூர்யா - லிங்குசாமி படம் ஆகியவற்றை வாங்கி வைத்திருக்கிறது.
சன் டி.வியைத் தொடர்ந்து, கலைஞர் டி.வி, விஜய் டி.வி, ஜெயா டி.வி, ராஜ் டி.வி, ஜி தமிழ் என முன்னணி டி,வி நிறுவனங்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தித் தங்களது நிறுவனத்தினை டி.ஆர்.பியை முன்னாடி கொண்டுவரப் பிரபல நடிகர்களோட படங்களை வாங்கும் போட்டியில் இறங்கி இருக்கிறது. மொத்தத்தில் 2014ம் ஆண்டு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், டி.வி நிறுவனங்கள் என அனைவருமே பண மழையில் நனைய இருப்பது உறுதி என்பது மட்டும் உண்மை.

No comments:

Post a Comment