24.11.13

நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது



ஆடுகளம், வனயுத்தம், பாண்டிய நாடு ஆகியப் படங்களில் நடித்துள்ளவர் பிரபல கவிஞர் வா.ஐ.ச ஜெயபாலன். இலங்கையைச் சேர்ந்தவரான இவர் அங்கு நடைபெற்ற உள்நாட்டு சண்டை காரணமாக புலம் பெயர்ந்து சென்னையில் வசித்து வருகிறார்.
கவிஞர் வா.ஐ.ச. ஜெயபாலனின் தாயார் சமாதி இலங்கை மாங்குளம் பகுதியில் உள்ளது. தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக அவர் நேற்று இலங்கை சென்றார்.
மாங்குளம் சென்ற அவர் தன் தாயார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பிறகு உறவினர் ஒருவரது வீட்டுக்கு அவர் சென்று கொண்டிருந்தார்.
நேற்று மாலை 5 மணி அளவில் கவிஞர் ஜெயபாலனை இலங்கை போலீசார் சுற்றி வளைத்தனர். விசா விதிகளை மீறி விட்டதாக கூறி அவரை கைது செய்தனர்.
கவிஞர் ஜெயபாலன் சுற்றுலா விசாவில் இலங்கை சென்றிருந்தார். எந்த அடிப்படையில் அவர் விசா விதிகளை மீறினார் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதை இலங்கை போலீசாரின் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகன் உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையே கவிஞர் ஜெயபாலன் கைது விஷயத்தில் சிங்கள உயர் அதிகாரிகள் மிகவும் காழ்ப்புணர்ச்சியுடன் அடாவடித்தனமாக நடந்து கொள்வது தெரிய வந்துள்ளது. நேற்றிரவு கவிஞர் ஜெயபாலனை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
அதன் பிறகு ஜெயபாலனை சிங்கள அதிகாரிகள் மாங்குளத்தில் இருந்து வவுனியாவுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இலங்கையில் தமிழர் – சிங்களர் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக சிங்கள உயர் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
வவுனியாவில் இருந்து ஜெயபாலனை கொழும்பு கொண்டு செல்ல சிங்களர்கள் முயன்று வருகிறார்கள். அவரை ரகசிய இடத்தில் காவலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அவரை சிங்களர்கள் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி சித்ரவதை செய்யக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment