5.12.13

ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


பாதுகாப்பு நடவடிக்கையாக, தமிழக அரசின் முத்திரைச் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தினம் டிசம்பர் 6ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில், பஸ் நிலையங்களில் இரவு, பகலாக போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்கு ஏற்கெனவே தீவிரவாதிகள் மிரட்டல் உள்ளது. இதனால் கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அனைத்து வாசல்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டு, பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இக்கோயிலில் உள்ள தமிழக அரசின் முத்திரைச் சின்னமான ஸ்ரீவடபத்திர சயனர் கோயில் ராஜகோபுரத்துக்கு 24 மணிநேரமும் இயந்திரத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் ரயில் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment