3.12.13

மீனவர் பிரச்னைக்கு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்: சுதர்சன நாச்சியப்பன்



தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும் என மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் செய்தியாளர்களிடம் கூறினார்.
மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்  கட்டுப்பாட்டு அமைப்பு சார்பில் பட்டாசு ஆலை கண்காணிப்பாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
  தமிழ்நாட்டிலிருந்து சுமார் 6000 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்கிறார்கள். இதில் இரண்டு அல்லது நான்கு படகில் செல்பவர்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது. இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் மீனவர்களைப் பார்த்து சுட்டனர். வலை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர் என செய்தி வெளியாகிறது.  இதுகுறித்த ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும். தமிழக உயர் போலீஸ் அதிகாரிகள், மீன்வளத் துறை அதிகாரிகள், மத்திய அரசின் ரா அல்லது சி.பி.ஐ. அதிகாரிகள், இந்திய கடற்படை அதிகார்கள், இலங்கை கடற்படை அதிகாரிகள், வெளியுறவுத் துறை, அமைச்சக அதிகாரிகள் கொண்ட உயர்நிலைக் குழுவை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும். அக் குழு மீனவர்கள் பிரச்னை குறித்து ஆய்வு செய்து, அறிக்கை வழங்க வேண்டும். இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  நான் இதுவரை 27 மாநில முதல்வர்களைச் சந்தித்து விட்டேன். தமிழக முதல்வரை இதுவரை சந்திக்கவில்லை. விரைவில் சந்திப்பேன் என எண்ணுகிறேன். வெளிநாட்டவர்கள் பலர் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களைச் சந்தித்துப் பேச தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.  தூத்துக்குடியில் துறைமுகம் உள்ளதாலும், இப் பகுதியில் நான்குவழிச் சாலை உள்ளதாலும், தென் மாவட்டங்களில் பலர் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது. இதனை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.

No comments:

Post a Comment