15.12.13

காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்: ஜி.கே.வாசன்


காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியில் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபட வேண்டும் என கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (ஐ.என்.டி.யூ.சி.) இணைப்பு சங்கமான துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியது, தொழிலாளர்கள் உற்சாகமாக இருக்கும்வரை காங்கிரஸ் கட்சியும் உயிரோட்டமாகவே இருக்கும். தொழிலாளர்கள்தான் இத்தேசத்தின் முதுகெலும்பாக உள்ளனர். வன்முறையில் ஈடுபடாமல் அறப்போராட்டம், அஹிம்சை, சுமுகமான பேச்சுவார்த்தைகள் மூலமாக தொழிலாளர்களின் நலன் காக்கும் இயக்கமாக ஐ.என்.டி.யூ.சி. செயல்பட்டு வருகிறது.
நான் கப்பல் துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் கடந்த நான்கரை ஆண்டுகளாக தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளேன். மேலும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளது. இந்த சாதனைகளை பட்டி தொட்டியெங்கும் எடுத்துச்செல்லும் பணியில் காங்கிரஸ் தொண்டர்களும் தொழிலாளர்களும் ஈடுபடவேண்டும்.
இவ்வாறு செய்தால் மத்தியிலும் மாநிலத்திலும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றார் வாசன்.

No comments:

Post a Comment