12.12.13

நாகை மீனவர்கள் 100 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்

நாகையிலிருந்து 32 படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 225 பேர், இலங்கைக் கடற்படையினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இதில் 125 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 100 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், சாமந்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 225 பேர், 32 படகுகளில் கடந்த 8-ம் தேதி நாகையிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் புதன்கிழமை காலை ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பிற மீனவர்கள், நாகை மீனவப் பஞ்சாயத்தாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மத்திய, மாநில அமைச்சர்களுக்கும், மீன்வளத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கையால் நாகை மீனவர்கள் 225 பேரையும் இலங்கைக் கடற்படை விடுவித்துள்ளதாக புதன்கிழமை பிற்பகல் மீனவர் வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறிது நேரத்துக்குப் பிறகு, கைது நடவடிக்கைக்குள்ளான 225 பேரில், 125 மீனவர்களும், அவர்களின் 17 படகுகள் மட்டும் விடுவிக்கப்பட்டதாகவும், எஞ்சிய 100 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 100 மீனவர்களின் நிலை என்ன என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. விடுவிக்கப்பட்ட 125 மீனவர்களும் வியாழக்கிழமை காலை நாகை வந்தடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறைபிடிக்கப்பட்டோர் எண்ணிக்கை: சிறைபிடிக்கப்பட்டு இலங்கைக் கடற்படையின் பாதுகாப்பில் உள்ள மீன்பிடி படகுகளின் உரிமையாளர் பெயர், அந்தப் படகுகளில் சென்ற மீனவர்களின் எண்ணிக்கை: ரா. தெட்சிணாமூர்த்தி - 6, மு. மனோன்மணி - 7, எஸ். மகாலிங்கம் - 7, எஸ். செந்தில்குமார் 7, அ. பன்னீர்செல்வம் - 8, அ. செல்லப்பன் (2 படகுகள்)- 13, ப. சாந்தி - 7, ச. தேவராணி - 8, மா. சுப்பிரமணி - 7, டி. ரெங்கநாதன் - 7, ர. புனிதா - 8, வீரப்பன் - 7, முத்துவேல் - 7.

No comments:

Post a Comment