12.12.13

ஜாதி, வகுப்பு மோதல்களைத் தூண்டினால் கடும் நடவடிக்கை: ஜெயலலிதா


தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்-காவல் துறை அதிகாரிகளின் மூன்று நாள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றும் முதல்வர் ஜெயலலிதா. உடன், (இடமிருந்து) அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், டிஜிபி ராமானுஜம், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

தமிழகத்தில் ஜாதி மற்றும் வகுப்பு மோதல்களைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு திருப்திகரமாக உள்ளது. சட்டம்-ஒழுங்கைப் பேணுவதில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சமூக விரோத சக்திகளை காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது என்றும் அவர் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்-காவல் துறை அதிகாரிகளின் மூன்று நாள் மாநாட்டை புதன்கிழமை தொடங்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை:
தமிழகத்தில் ஏழை மற்றும் சாமானிய மக்களின் நலனுக்காக மாநில அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவர்களுக்கு தரமான உணவு, குடிநீர், வசிப்பிடம் வழங்குவதில் தொடங்கி பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டுக்காகவும் பல சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் பல துறைகளின் சிறப்பான செயல்பாடுகளுக்காக தொடர்ச்சியாக பல விருதுகளை வென்று வருகிறது.
சிறந்த தலைமை, சட்டம்-ஒழுங்கை நல்ல முறையில் பராமரிப்பது, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் அரசு அலுவலர்கள் ஆகிய அம்சங்களால் தான் தமிழகம் சிறப்பான விருதுகளையும், சாதனைகளையும் அடைய முடிகிறது.
"தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023' மாநில அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களும், வித்தியாசமான இலக்குகளை எட்ட கனவுகளுடன் கடின உழைப்பும் வேண்டும் என்பதை நான் அறிவேன்.
அரசின் கனவுத் திட்டங்களை நனவாக்குவதில் கீழ்நிலை அலுவலர்களின் பங்கு மிகமிக முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.
சட்டம்-ஒழுங்கு திருப்தி: ஒரு மாநிலம் சிறப்பான முறையில் செயல்பட அத்தியாவசியத் தேவையாக இருப்பது சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதும், மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் தான். சட்டம்-ஒழுங்கு மாநிலத்தில் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருவது திருப்தியும், பெருமையும் அளிக்கிறது. தமிழகத்தில் வகுப்புவாத, இடதுசாரி தீவிரவாத மற்றும் மதவாத மோதல்கள் எதுவும் நிகழவில்லை.
காவல் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அளிக்கப்பட்ட சுதந்திரத்தின் மூலமே இது சாத்தியமானது.
மாநிலத்தில் ஜாதி மற்றும் வகுப்பு மோதல்களை ஏற்படுத்த யார் முயற்சித்தாலும் அதை மாநில அரசு வேடிக்கை பார்க்காது.
இது போன்ற முயற்சிகளை காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி வருகிறது.
தமிழகத்தில் இடதுசாரி தீவிரவாத அமைப்புகள் காலூன்ற முயற்சித்த போது அதை மாநில அரசு உடனடியாக தடுத்து நிறுத்தியது. அவர்களின் முயற்சிகள் வெற்றி பெறாமல் போனதற்குக் காரணம், சாதாரண மற்றும் சாமானிய மக்களின் தேவைகளை நன்கறிந்து அவற்றை மாநில அரசு உடனடியாக நிறைவேற்றியதுதான். இதனால், அடிப்படைத் தேவைகளுக்காக இடதுசாரி தீவிரவாத அமைப்புகளின் பக்கம் மக்கள் கவனம் செலுத்தவில்லை.
இடதுசாரி தீவிரவாத அமைப்புகளின் முயற்சிகளைத் தடுக்கும் காவல் துறையின் நடவடிக்கைகளுக்கு அரசின் வளர்ச்சித் திட்டங்களும், மக்களின் தேவைகளை அறிந்த நிர்வாகமும் உறுதுணையாக இருந்து வருகின்றன என்றார் முதல்வர் ஜெயலலிதா.
இந்த மாநாட்டில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், டிஜிபி ராமானுஜம், அனைத்துத் துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
332 அறிவிப்புகளுக்கு உத்தரவு
மாவட்டங்களில் சிறப்பான ஆட்சியை நடத்தும் வகையில், அதற்கான சாதகமான சூழல் மற்றும் போதுமான ஒத்துழைப்பை அளிப்பதே எனது ஆட்சியின் நோக்கமாகும்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் 81 அறிவிப்புகளும், கடந்த ஆண்டு 346 அறிவிப்புகளும் என்னால் வெளியிடப்பட்டன.
அதில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 332 அறிவிப்புகளுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எட்டு அறிவிப்புகள் போதிய சாத்தியக்கூறுகள் இல்லாத காரணத்தால் கைவிடப்பட்டுள்ளன.
உத்தரவுகள் வெளியிடப்பட்ட அறிவிப்புகளைச் சிறப்பான முறையில் செயல்படுத்தி, அவற்றின் பயன் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வது மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

No comments:

Post a Comment