9.12.13

தேஜ்பாலுக்கு எதிராக மேலும் 2 குற்றச்சாட்டுகள்

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு எதிராக கோவா குற்றப்பிரிவு போலீஸார் மேலும் 2 பிரிவுகளில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்திய தண்டனைச் சட்டம் 341 (சட்ட விரோதமாக கட்டுப்படுத்துதல்), 342 (சட்ட விரோதமாக அடைத்து வைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் இரு குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிரான வழக்கில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம், சாட்சிகள் மற்றும் சம்பவம் நடந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டிருப்பதாக மூத்த குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக, தேஜ்பாலுக்கு சனிக்கிழமை முதல் மேலும் 4 நாள்களுக்கு, அதாவது டிசம்பர் 10-ஆம் தேதி வரை போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் ஷோமா செüத்ரி சனிக்கிழமையன்று கோவாவில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். பெண் நிருபர் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக, தேஜ்பால் மீது 354-ஏ, 376 மற்றும் 376 (2) (கே) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment