21.12.13

துப்பாக்கி குண்டு பாய்ந்து குழந்தை உள்பட 3 பேர் காயம்

உளுந்தூர்பேட்டை அருகே, பறவையைச் சுட்டபோது, குறி தவறிய துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் குழந்தை உள்பட 3 பேர் வெள்ளிக்கிழமை காயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம், வீரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் சிவா (23). விவசாயி. இவர் உரிமம் இல்லாமல், நாட்டுத் துப்பாக்கி ஒன்றை வீட்டில் வைத்திருந்தார். இந்த துப்பாக்கியை பயன்படுத்தி முயல் மற்றும் பறவைகளை வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
  வெள்ளிக்கிழமை, இவர் துப்பாக்கியின் மூலம் பறவை ஒன்றை சுட்டுள்ளார். அப்போது குண்டுகள் குறிதவறி, தெறித்து சிதறியதில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்த இதே பகுதியைச் சேர்ந்த அர்ச்சுனன் மகள் சுகன்யா (21), கிருஷ்ணமூர்த்தி மகன் பிரேம் (19), அய்யனார் மகள் வைத்தீஸ்வரி (3) ஆகிய மூவரின் கால்கள் மீது பாய்ந்தன. இதில் மூவரும் காயமடைந்தனர்.
 அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இவர்கள் மூவரையும் திருக்கோவிலூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பாண்டியன், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் விசாரித்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்த சிவாவை கைது செய்தனர்.

No comments:

Post a Comment