14.12.13

மோடி தலைமையில் "ஒற்றுமை ஓட்டம்'

குஜராத் மாநிலம் வதோதராவில் முதல்வர் நரேந்திரமோடி தலைமையில், சர்தார் வல்லபபாய் படேல் சிலை நிறுவுவதற்கான ஒற்றுமை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து பாஜக துணைத்தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:
குஜராத் மாநிலத்தில் 182 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான சர்தார் வல்லபபாய் படேலின் சிலை நிறுவப்பட உள்ளது.
இந்த சிலைக்கான மணலும், இரும்பும் 2.38 லட்சம் பஞ்சாயத்துகளில் சேகரிக்கப்பட உள்ளன. இவற்றை சேகரிப்பதற்கான ஆதரவு கோரி ஒற்றுமை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை 565 இடங்களில் தலா 2 கி.மீ தூரம் நடைபெற உள்ளது.
ஆமதாபாதில் நடைபெறும் ஒற்றுமை ஓட்டத்துக்கு மூத்த தலைவர் அத்வானியும், தில்லியில் நடைபெறும் ஓட்டத்துக்கு பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கும், போபாலில் நடைபெறும் ஓட்டத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜும் தலைமை தாங்க உள்ளனர்.
சிலை நிறுவுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குஜராத் மாநில அரசு செய்து முடித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு இத்திட்டம் அனுப்பப்பட்டுள்ளது என்று முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

No comments:

Post a Comment