14.12.13

மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தோற்கும்: அத்வானி


"நான்கு மாநில பேரவைத் தேர்தலைப் போல் மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தோற்கும்' என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச சிந்தி மாநாட்டில் அத்வானி கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுதந்திர இந்தியாவில் கடந்த 1952ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களையும் நான் கவனித்து வந்துள்ளேன். சமீபத்தில் நடைபெற்ற 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது போல் முன்னெப்போதும் நிகழ்ந்ததில்லை. இந்தப் படுதோல்விக்கு பணவீக்கமும் ஊழலும்தான் முக்கிய காரணம்.
தவறு செய்பவர்களை இந்நாட்டு வாக்காளர்கள் எப்போதும் விட்டு வைத்ததில்லை. சமீபத்தில் நடந்த 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த அதே கதியை மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் அடையும்.
நாட்டில் அவசரநிலை அமலில் இருந்த காலகட்டத்தில், ஊடகங்கள் மீதும் சமூகத்தின் மற்ற பிரிவினர் மீதும் தணிக்கை முறை வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. அவசரநிலை முடிந்த பின் 1977இல் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டபோது காங்கிரஸ் மிக மோசமாகத் தோற்றது. வட இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் அது ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றார் அத்வானி.

No comments:

Post a Comment