24.12.13

மதச்சார்பற்ற சக்திகளுடன் கூட்டணி அமைப்போம்: ஜி.கே. வாசன்



மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் வட்டார கிறிஸ்தவ இயக்கத்தின் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
இந்தியாவில் மத்தியில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி செய்த ஒரே கட்சி காங்கிரஸ்தான். 100 வருட பாரம்பரியம் கொண்ட இக்கட்சிக்கு நாட்டின் அத்தனைக் கிராமங்களிலும் கிளைகள் உள்ளன.
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் உள்பட மத்தியில் தேச ஒருமைப்பாட்டை காக்கும் மதச்சார்பற்ற  கூட்டணி அமைத்து, கடந்த 2004 மற்றும் 2009 பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்றதுபோல் வெற்றி பெறுவோம். மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளும் பயனடைந்துள்ளன. இதனை பிரசார வியூகமாகப் பயன்படுத்துவோம்.
இந்தியா இலங்கைக்கு இடையில் நிலவும் பிரச்னைகள் நிரந்தரமாக தீரும் வரை, இந்திய ராணுவம், இலங்கை ராணுவத்துக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது. இதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என்றார்.

No comments:

Post a Comment