11.12.13

தமிழகம் - இலங்கை மீனவர்கள் இடையே இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களைத் தடுப்பதற்காக தமிழக - இலங்கை மீனவர்கள் சங்கங்களிடையேயான பேச்சுவார்த்தை டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெறும் என்று தெரிகிறது.
இத்தகவலை வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
இது தொடர்பாக தமிழக அரசுடன் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருவதாகவும், இந்த மாத இறுதிக்குள் இந்தப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.
இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதங்கள் எழுதியுள்ளார்.
தமிழக - இலங்கை மீனவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினால் இந்தப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்று இந்திய - இலங்கை அரசுகள் கருதுகின்றன.
இதை அண்மையில் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டின்போது இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சுஜாதா சிங் இலங்கை அரசிடம் வலியுறுத்தினார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைச் சிறைகளில் 88 இந்திய மீனவர்களும் இந்தியச் சிறைகளில் 120 இலங்கை மீனவர்களும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment