6.12.13

8 நாட்கள் நடக்கிறது சென்னையில், சர்வதேச படவிழா கமல்ஹாசன்–அமீர்கான் தொடங்கி வைக்கிறார்கள்



சென்னை,
சென்னையில், சர்வதேச படவிழா 8 நாட்கள் நடக்கிறது. இந்த படவிழாவை நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகிய இருவரும் தொடங்கி வைக்கிறார்கள்.
சர்வதேச படவிழா
சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச படவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச படவிழா வருகிற 12–ந்தேதி தொடங்கி, 19–ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது.
சர்வதேச படவிழாவின் தொடக்க நிகழ்ச்சியும், நிறைவு விழாவும் சென்னையில் உள்ள முத்தா வெங்கடசுப்பாராவ் அரங்கில் நடைபெறுகிறது.
கமல்ஹாசன்–அமீர்கான்
சர்வதேச படவிழாவை 12–ந்தேதி நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகிய இருவரும் தொடங்கி வைக்கிறார்கள்.
இந்த படவிழாவில் 58 நாடுகளில் இருந்து 165 திரைப்படங்கள் திரையிடுவதற்கு தேர்வாகி உள்ளது. இதில் கேன்ஸ், பெர்லின், வெனிஸ் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட படங்களும் அடங்கும்.
இந்த படங்கள் அனைத்தும் சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ், ஐநாக்ஸ், அபிராமி, கேசினோ, ராணி சீதைஹால் ஆகிய இடங்களில் திரையிடப்பட உள்ளன.
தமிழ்படங்கள்
தமிழ்படங்களுக்கான போட்டிக்கு 12 படங்கள் வந்திருக்கிறது. அந்த படங்கள் வருமாறு:– 1. ஆதலால் காதல் செய்வீர், 2. 6 மெழுகுவர்த்திகள், 3. அன்னக்கொடி, 4. ஹரிதாஸ், 5. கும்கி, 6. மரியான், 7. மூடர்கூடம், 8. மூன்று பேர் மூன்று காதல், 9. பரதேசி, 10. பொன்மாலைப்பொழுது, 11. சூது கவ்வும், 12. தங்கமீனகள்.
தமிழ்திரைப்படங்களை விருதுக்கு தேர்வு செய்யும் நடுவர் குழுவுக்கு டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் தலைவராகவும், நடுவர் குழு உறுப்பினர்களாக நடிகை ஸ்ரீபிரியா, எழுத்தாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சுகாசினி மணிரத்னம்
தொடக்க விழாவின் போதும், நிறைவு நாள் நிகழ்ச்சியின் போதும் பிரபல திரையுலக கலைஞர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சிகளும் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
சர்வதேச படவிழா பற்றிய இந்த விவரங்களை அறிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. அதில் நடிகர்கள் மோகன், மோகன்ராம் நடிகைகள் சுகாசினி மணிரத்னம், ஸ்ரீபிரியா ராஜ்குமார், மானு பட அதிபர் யு.டி.வி. தனஞ்செயன், டைரக்டர் ஸ்டான்லி ஆகியோர் கலந்து கொண்டார்கள். கண்ணன் வரவேற்று பேசினார். தங்கராஜ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment