18.12.13

கருணாநிதி தமிழக மக்களை ஏமாற்றுகிறார்: ஜான்பாண்டியன்

தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழக மக்களை ஏமாற்றி குடும்ப அரசியல் நடத்தி வருகிறார் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பெ.ஜான்பாண்டியன் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில், கட்சியின் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு இளைஞர்கள் எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அவர், செவ்வாய்கிழமை இரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று கருணாநிதி கூறுகிறார். தமிழர்களை அழிக்கும் கூட்டணியுடன் சேர்ந்து தமிழ் மக்களை கொல்வதில் முழு பங்கு வகித்தவர். 2009-ம் ஆண்டு இது கருணாநிதிக்குத் தெரியவில்லையா? தமிழ் மக்களை கருணாநிதி ஏமாற்றுகிறார். மாநிலங்களவைத் தேர்தலில் தனது மகள் கனிமொழி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடித்தார்.
தற்போது நான்கு மாநில தேர்தல் முடிவு, ஒட்டு மொத்த தமிழகமும் காங்கிரஸ் கட்சியை புறக்கணித்துள்ளது போன்ற சூழ்நிலைகளைப் பார்த்துக் கொண்டு கருணாநிதி தற்போது இவ்வாறு பேசுகிறார். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலாது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சியை அழிப்பதில் முழு மூச்சாக இருக்கும்.
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வருவதை கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கும். இது தமிழர்களுக்கு பெருமையாக இருக்கும். தமிழர் பிரதமராக வரும் வாய்ப்பு ஒரு முறை ஜி.கே.மூப்பனாருக்கு கிடைத்தது. அதையும் கெடுத்தத பெருமை கருணாநிதியையே சேரும்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தன்னுடன் இருக்கும் ஒரு எம்.எல்.ஏ.யை கூட காப்பாற்ற, தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை. இவரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன செய்ய முடியும்? பதவி சுகத்தை அனுபவிப்பதற்காக மக்களை ஏமாற்றுகிறார் இவர். இதனை தாழ்த்தப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு மக்களுக்கு செய்து வரும் நன்மைகள் ஏராளம், அளவிடமுடியாது. இதனையே மக்கள் ஏற்காடு இடைத் தேர்தலில் பிரதிபலித்து சுமார் 72 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளார்கள். இதனை ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரமாக கருதலாம் என்றார் அவர்.

No comments:

Post a Comment