28.12.13

முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற தவறுகளால்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது: மாநிலத் தலைவர் பிரஹலாத் ஜோஷி

கர்நாடகத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற தவறுகளால்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளதாக, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
பெங்களூருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் அவர் பேசியது:
கர்நாடகத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் நடந்த சில தவறுகளால், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. பாஜகவின் தவறுகள், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க காரணமாகிவிட்டது.
முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் அரசுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை. புதிய திட்டங்களை அறிவிப்பதும், அதற்கு எதிர்ப்பு உருவாகும் போது,  அதை திரும்பப் பெறுவதே காங்கிரஸ் அரசின் போக்காக உள்ளது.
மாநில அரசின் நிதி நிலைமை சரியில்லாமல் இருப்பதற்கு முந்தைய பாஜக ஆட்சியே காரணம் என்று முதல்வர் சித்தராமையா கூறியது கண்டிக்கத்தக்கது. முந்தைய பாஜக ஆட்சியில் மாநிலத்தின் நிதி நிலை சிறப்பாக இருந்தது.
காங்கிரஸ் அரசின் மோசமான நிதி நிர்வாகத்தை மறைப்பதற்காக பாஜக மீது பழிபோடுகிறார் சித்தராமையா. மாநிலத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment