25.12.13

40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: ஜெயலலிதா

அதிமுக நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 26 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தும் கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா உள்ளிட்ட நிர்வாகிகள்.


தமிழகம்-புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற களப்பணியாற்றுவோம் என்று எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா உள்பட அதிமுகவினர் உறுதி மொழி ஏற்றனர்.
அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி. ஆரின் 26-ஆம் ஆண்டு நினைவு தினத்தை (டிச. 24) ஒட்டி, சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மலர் தூவி செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு, நினைவிடம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் உறுதியேற்பு நிகழ்வு நடைபெற்றது. கட்சியின் பொருளாளரும் தமிழக நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியைப் படிக்க அதை அனைவரும் பின் தொடர்ந்து வாசித்தனர். உறுதிமொழி விவரம்:
முதல்வர் ஜெயலலிதா மூலமாக இந்தியாவுக்கு புதுவாழ்வு ஏற்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்ற இந்த நேரத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக முழுமையான வெற்றியைப் பெற அல்லும் பகலும் அயராது உழைப்போம்.
தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய அர்ப்பணிப்போடு கூடிய, கடும் உழைப்பின் மூலம், முழு ஆற்றலோடு களப் பணியாற்றுவோம்.
தமிழர்களின் நலனுக்கு எதிரான, மனநிலையைக் கொண்டு, தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசின் துரோகங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லவும், தமிழக அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

No comments:

Post a Comment